பதிவு செய்த நாள்
05 ஜன2018
23:57
மும்பை:‘நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 2.20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த, 2016 -– 17ம் நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடு, 4 மடங்கு உயர்ந்து, 3,500 கோடி டாலராக, அதாவது, 2.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில், 700 கோடி டாலர், அதாவது, 48,400 கோடி டாலர் முதலீடு செய்திருந்தன.நடப்பு நிதியாண்டில், ஏப்., – செப்., வரையிலான அரையாண்டில், 1,500 கோடி டாலர், அதாவது, 95,600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, அக்., – மார்ச் வரையிலான, இரண்டாவது அரையாண்டில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 2,800 – 3,500 கோடி டாலர், அதாவது, 1.80 –- 2.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.நடப்பு நிதியாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், அதிகளவில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. ஏப்., – நவ., வரை, நிகர அளவில், 1.17 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இது, ஒட்டுமொத்த பங்குச் சந்தை முதலீடு உயர வழிவகுத்து உள்ளது.
எனினும், அரசு மற்றும் நிறுவன கடன் பத்திரங்களில், அதிகளவில் முதலீடு செய்யப்பட்டு விட்டதால், வரம்பு கருதி, வரும் மாதங்களில், முதலீடு மிதமான அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடன் பத்திரங்களில் மட்டும், நடப்பு நிதியாண்டில், நிகர அளவாக, 1.50 – -1.60 கோடி லட்சம் ரூபாய், முதலீடு இருக்கும்; பங்குகளில், 27 ஆயிரம் – 59 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
எனினும் இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்களின் வருவாய் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்துள்ளது.அமெரிக்காவில், அரசின் சிக்கன நடவடிக்கை, வரி மற்றும் வேலைவாய்ப்பு சட்ட சீர்திருத்தங்கள், மத்திய வங்கியின் வட்டி உயர்வு போன்றவற்றால், கடன் பத்திர முதலீடுகள் மீதான வருவாய் உயர்ந்துள்ளது. இதன் தாக்கம், இந்திய கடன் பத்திர சந்தையில் எதிரொலித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
19 மாதங்களில்
‘செபி’யிடம், 2016 ஏப்., – 2017 அக்., வரை, 19மாதங்களில், 4,500 அன்னிய நிதி நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில், நடப்பு நிதியாண்டு கணக்கு மட்டும், 1,064 ஆகும். கடந்த, 2014 – 15ம் நிதிஆண்டில், ‘செபி’ புதிய அன்னிய நிதி நிறுவன விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நிதிச் சேவையில் உள்ள அன்னிய நிறுவனங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அன்னிய நிதி நிறுவனங்களின் பதிவும், முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன.
‘இக்ரா’ அறிக்கை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|