பதிவு செய்த நாள்
08 ஜன2018
00:19
முதலீட்டாளர்கள், வழக்கமாக செய்யும் தவறுகளை தவிர்ப்பதன் மூலம் எதிர்பார்த்த பலனை பெறலாம் என, நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
முதலீட்டின் நோக்கமே அதன் மூலம் பலன் பெற வேண்டும் என்பது தான். முதலீட்டிற்கான நிதி வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது அதிக பலனை தரக்கூடியவற்றை தேர்வு செய்ய வேண்டும் என்றே வலியுறுத்தப்படுகிறது. எனவே முதலீட்டின் பலனில் கவனம் செலுத்துவதோ அல்லது முதலீட்டின் போக்கை கண்காணிப்பதோ தவறில்லை. ஆனால், முதலீட்டின் மீது அதிகப்படியான பலனை எதிர்பார்ப்பது சிக்கலை ஏற்படுத்தலாம். ஒவ்வொருவர் நிதி சூழலுக்கும் ஏற்ற, முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும் ஒவ்வொரு முதலீட்டு வாய்ப்பும் அவற்றுக்கான கால அளவிற்கு ஏற்பவே பலன் அளிக்கும். இதை புரிந்து கொள்ளாமல், அதிக அளவில் பலனை மட்டும் எதிர்பார்ப்பது நிதி திட்டமிடலை பாதிக்கலாம்.
முதலீட்டில் தெளிவு
உதாரணத்திற்கு ‘மியூச்சுவல் பண்ட்’ திட்டங்கள் முதலீட்டின் மீதான நல்ல பலன் அளிப்பதாக கருதப்படுகின்றன. எனினும் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்த முதலாண்டே அது எதிர்பார்த்த பலனை தரவில்லை என நினைப்பது சரியல்ல. குறிப்பிட்ட அந்த முதலீடு பலன் தருவதற்கான கால அவகாசம் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் முதலீட்டை விலக்கி கொள்ளக்கூடாது.
அதே போலவே, சிலர் ஒரு முதலீடு போதிய பலனை தரவில்லை என அறிந்தும் கூட, அதிலிருந்து வெளியேற தயங்குகின்றனர். இதனால் இழப்பு ஏற்படும் என, அஞ்சுகின்றனர். ஆனால், நஷ்டத்தை தரும் முதலீட்டில் இருந்து உரிய காலத்தில் வெளியேறி, வேறு சிறந்த வாய்ப்பில் முதலீடு செய்வதன் மூலம், அந்த நஷ்டத்தை விரைவாக ஈடு செய்து விடலாம். முதலீட்டு உத்தி தொடர்பாக தெளிவு இருக்க வேண்டும். அதற்கேற்ப முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
வங்கி சேமிப்பு கணக்கில் கொஞ்சம் முதலீடு, டிமெட் வடிவில் சில முதலீடு, காப்பீடு திட்டங்கள், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் என, எல்லா வகையான முதலீட்டு வாய்ப்புகளிலும் முதலீடு செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதைவிட முதலீட்டின் பலனை கண்காணிப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். எனவே குழப்பம் இல்லாத வகையில் முதலீடு செய்ய வேண்டும்.
அதே போல முதலீடுகள் பரவலாக இருக்க வேண்டும். எந்த ஒரு குறிப்பிட்ட முதலீட்டு வாய்ப்பிலும் அதிக அளவில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
சமபங்கு முதலீடு
பங்குச்சந்தை முதலீடு அதிக பலன் தரக்கூடியது. ஆனால் முதல் முறை முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் பங்குகளில் முதலீடு செய்யும் போது, அதன் அடிப்படைகளை அறிந்திருப்பது அவசியம். வெறும் பலனை மட்டுமே கருத்தில் கொண்டு பங்கு முதலீட்டில் ஈடுபடும் போது சந்தையின் ஏற்ற இறக்கம் துாக்கத்தை கெடுக்கலாம்.
வரிசேமிப்பிற்கான முதலீட்டை மேற்கொள்ளும் போதும் அது ஒட்டுமொத்த நோக்கில் பலன் அளிக்க கூடியதாக இருக்கும் வகையில் தேர்வு செய்ய வேண்டும். பலரும் வரிச்சலுகைக்காக அதிகம் யோசிக்காமல் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போவதோடு, காப்பீடு பாலிசிகளை தொடராமல் விடக்கூடிய நிலையும் உருவாகும். இது கூடுதல் நஷ்டத்தை அளிக்கும். இத்தகைய தவறுகளை தவிர்ப்பதன் மூலம் முதலீட்டின் சரியான பலனை பெறலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|