பதிவு செய்த நாள்
08 ஜன2018
00:28
புத்தாண்டில் சிறப்பான துவக்கம் கண்டது, இந்திய பங்கு சந்தை. முதல் வாரத்தில் தொடர்ந்து ஏற்றம் கண்ட சந்தைக்கு, எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குகளை வாங்க தொடங்கியது பக்கபலமாக அமைந்தது.
இது கடந்த ஆண்டில் அவர்கள் எடுத்த முதலீட்டு நிலைப்பாட்டில் இருந்து ஒரு முக்கிய மாற்றம். 2017ல் எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்திய பங்குகளை விற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.புத்தாண்டின் இன்னொரு முக்கிய மாற்றம், உற்பத்தி சார்ந்த குறியீடான, பி.எம்.ஐ.,ல் ஏற்பட்ட அபரிமித வளர்ச்சி. பொருளாதாரம் மீண்டும் எழும் சூழல் வலுக்கிறது.
துவக்கம் இனிதே நடந்தாலும், சந்தையில் தொடர்ந்து என்ன நடக்கும்? வரும் வாரங்களில் என்ன எதிர்பார்க்கலாம்? கடந்த ஆண்டு முதல், மத்திய அரசின் பட்ஜெட், பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதன் விளைவாக ஆண்டுதோறும் எதிர்பார்ப்பு சார்ந்து நடக்கும், பட்ஜெட் பங்கு வர்த்தகம், ஜனவரிக்குள் முடிந்துவிடும்.
முன் ஜனவரியில், பன்னாட்டு முதலீட்டாளர்கள் வருகை சார்ந்தும், பணவரத்து சார்ந்தும் மட்டுமே சந்தையின் போக்கு அமையும். இப்போது, பட்ஜெட் வர்த்தகமும் அவற்றோடு சேர்ந்துகொண்டு ஒரு விறுவிறுப்பான சந்தை சூழலை உருவாக்கியுள்ளது.இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், நடக்கும் பா.ஜ., ஆட்சியின் இறுதி பட்ஜெட் இதுவே. அடுத்த ஆண்டு பட்ஜெட், பொதுத்தேர்தலை வென்று புதிதாக ஆட்சி அமைக்கும் அரசால் தாக்கல் செய்யப்படும்.இந்த ஆட்சியின் இறுதி பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? பங்குச் சந்தை சார்ந்த மாற்றங்கள் எப்படி அமையும்?
இந்த பட்ஜெட், ஒரு தேர்தல்பட்ஜெட் என்றே எதிர்பார்க்கலாம். அதில், மக்களை கவரும் வண்ணம் அறிவிப்புகள் வந்தே ஆக வேண்டும். முக்கியமாக சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம், சிறுதொழில்மு னைவோர் ஆகியோருக்கு சலுகைகள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.
அரசு முதலீடுகளும் தொடர்ந்து நடந்தால் மட்டுமே, பொருளாதார வளர்ச்சியை கூட்ட முடியும். மேலும் கச்சா எண்ணெய் விலை ஏறிய வண்ணம் இருக்கிறது. அரசின் நிதிகள் போதுமானதாக அமையாது.ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து வரி வசூல் வலுப்படாத நிலையில், பட்ஜெட் நிச்சயம் அரசை நிதி அழுத்தத்தில் தள்ளும் சூழல் உருவாகியுள்ளது. அரசு செய்ய நினைக்கும் அனைத்தையும் செய்ய, நிச்சயம் வரிகள் கூட வேண்டும். ஆனால், ஜி.எஸ்.டி., யை கூட்டும் சாத்தியக்கூறு நிச்சயம் இல்லை.
இந்தச் சூழலில், பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டுவோர், கண்டிப்பாக வரி அமைப்புக்குள் கொண்டு வரப்படுவர். இதன் மூலம் அரசால், ரூ.50,000 கோடி வரை கூடுதல் வரி வசூலிக்க முடியும். அரசியல் ரீதியாகவும், பணக்காரர்களிடம் கூடுதல் வரி வசூலித்து, அதிலிருந்து ஏழைகள் மற்றும், நடுத்தர வர்க்கத்திற்கு சலுகைகள் தருவது ஆட்சியில் உள்ளோருக்கு சாதகமாக அமையும்.சந்தை இதை எதிர்பார்த்து, பட்ஜெட் வர்த்தகத்தில் இறங்கும். கச்சா எண்ணெய் விலை மற்றும் பணவீக்கம் சந்தையை நிச்சயம் பாதிக்கும். மேலும், மக்களை கவரும் எண்ணத்தோடு போடப்படும், பட்ஜெட் எப்படி சந்தையை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த சூழலில், சந்தை தொடர்ந்து உயர்ந்தால், அது முதலீட்டாளர்களின் குழப்பத்தை மேலும் அதிகாரிக்கும். ஆக, இந்த ஜனவரியில், சுவாரஸ்யமான பங்கு வர்த்தகத்தை எதிர்பார்க்கலாம். ஆனால், இது முதலீட்டுக்கு உகந்த மாதமா என்பதை, பட்ஜெட் மட்டுமே தீர்மானிக்கும். இப்போது, நம் முதலீட்டு முடிவுகளின் எதிர்காலத்தை நம்மால் சரியாக கணிக்க இயலாது. அத்தகைய நேரங்களில், யூகங்களின் அடிப்படையில் முதலீடு செய்வது மிக கடினம்.மிக நிதானமாகவும் கவனமாகவும் முதலீட்டு முடிவுகளை எடுக்கும் நேரமாக இந்த ஜனவரியை நாம் அணுக வேண்டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|