பதிவு செய்த நாள்
08 ஜன2018
00:34
வாராக் கடன் பிரச்னையைத் தீர்ப்பதற்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேற்கொண்டிருக்கும் ஒரு நடைமுறை, விமர்சனங்களையும் வரவேற்பையும் ஒருங்கே பெற்றிருக்கிறது. வழக்கத்துக்கு மாறான இந்த முயற்சியை மற்ற வங்கிகளும் பின்பற்றுவதற்கு வாய்ப்புண்டா?
கடந்த, 2017 செப்டம்பர் மாதத்தோடு முடிந்த இரண்டாம் காலாண்டின் இறுதியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) வாராக் கடன் 18,950 கோடி ரூபாய். இது அதற்கு முந்தைய காலாண்டுகளோடு ஒப்பிடும்போது படிப்படியாக குறைந்து வந்துள்ளது. மொத்த கொடுக்கப்பட்ட கடன்களோடு ஒப்பிடும்போது, 13.88 சதவீதம் வாராக்கடன்களாகத் தேங்கிப் போய்விட்டன.
மத்திய ரிசர்வ் வங்கி, ஏற்கெனவே ஐ.ஓ.பி.யை, தன் உடனடி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொதுத் துறை வங்கிகளின் பட்டியலிலேயே 2015 செம்டம்பர் முதல் வைத்திருக்கிறது.இந்த நிலையில், ஐ.ஓ.பி., வாராக் கடன் அளவைக் குறைக்க பலவிதங்களில் முயற்சி செய்து வந்தது.
வேலைவாய்ப்பு
பூஷண் ஸ்டீல் நிறுவனத்துக்கு, அது வழங்கிய கடன்களைக் கூட, அது வேறு ஒரு நிறுவனத்துக்கு, 40 சதவீத கழிவில் விற்றுவிட்டது. வந்தவரைக்கும் லாபம் என்பதே இந்த அணுகுமுறை.தற்போது, ஐ.ஓ.பி. 6,978.94 கோடி ரூபாய் வாராக் கடனை, தன்னுடைய சொந்த இருப்பிலிருந்தே ‘தள்ளுபடி’ செய்துவிட முடிவு செய்திருக்கிறது. இதற்கு, அது பயன்படுத்தப் போவது ஷேர் பிரிமியம் அக்கெளன்டில் உள்ள நிதியை.இதர வங்கிகளும் வாடிக்கையாளர்களும் ஒருபக்கம் இந்த முடிவைக் கண்டு ஆச்சரியப்பட, வெள்ளிக்கிழமை அன்று, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இந்த முடிவை வரவேற்கும் விதமாக, ஐ.ஓ.பி.,யின் பங்கை வாங்கிக் குவித்தார்கள்.
அன்று காலை வணிகம் தொடங்கியபோது, ஐ.ஓ.பி., பங்கு விலை, 9 சதவீத அளவுக்கு உயர்ந்தது.
பின்னணி என்ன?
வாராக் கடன்களை வசூல் செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை, மத்திய ரிசர்வ் வங்கி செய்துவருவதைப் படித்திருப்பீர்கள். இந்திய பொதுத்துறை வங்கிகளில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வாராக் கடன் நிலவுவதால், வங்கித் துறையில் தேக்கம். அதனைச் சரிசெய்து, வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்டுகள் வளம் பெற, மத்திய அரசு பெரும் தொகையை மறுமுதலீடு செய்ய முனைந்திருக்கிறது.
இப்படிச் செய்வதன் மூலம், மீண்டும் வங்கிகள் கடன் கொடுப்பது தொடங்கும்; அதன்மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும்.அதேசமயத்தில் வாராக் கடன்களை வைத்துள்ள பெரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்களை திவால் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, முடிந்தவரை வசூல் செய்யவேண்டும் என்ற முயற்சிகளும் தொடர்கின்றன.
அட்ஜெஸ்ட்மென்ட்
இந்த நிலையில், ஐ.ஓ.பி. ஷேர் பிரிமியம் அக்கெளன்டைப் பயன்படுத்தி, தன்னுடைய வாராக் கடனை அடைத்துக்கொண்டிருக்கிறது.ஒரு பங்கின் முகமதிப்பு ஒரு ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது சந்தையில் 10 ரூபாய்க்கு விற்பனை ஆகியிருந்தால், மிச்சமுள்ள ஒன்பது ரூபாயை, இந்த ஷேர் பிரிமியம் அக்கெளன்டில் தான் சேமித்து வைப்பார்கள். இந்த தொகையை ஒருசில குறிப்பிட்ட விஷயங்களுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் உண்டு.
நிறுவனச் சட்டம், 2013ன் படி, இந்தத் தொகையை, 5 காரணங்களுக்காகப் பயன்படுத்தலாம். அதில், போனஸ் பங்குகள் வழங்கவும், கடன் பத்திரங்கள் வாங்கவும், செலவினங்களை ‘தள்ளுபடி’ செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடைசி ஷரத்தைப் பயன்படுத்தி, ஐ.ஓ.பி., வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்கான உரிய அனுமதிகளை மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்தும் பெற்றுள்ளது.
ஐ.ஓ.பி.,யின் ஷேர் பிரிமியம் அக்கெளன்டில், 7,650 கோடி ரூபாய் இருப்பதால், 6,978.94 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்வது பெரிய விஷயமாக இராது. அதாவது, இங்கே ஏற்கெனவே இருந்த சேமிப்பில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக பணம் வெளியிலிருந்து கோரப்படவில்லை. ஒருவகையில் இரு கணக்குப் புத்தகத்தில் செய்யப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட். நிகர வருவாயும் இல்லை, நிகர செலவும் இல்லை. ஆனால், வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
சரியான முறையா?
இந்தப் பணம் யாருடையது? முதலீட்டாளர்களுடையது. அதனை, அவர்களுடைய நலனுக்காகப் பயன்படுத்தவேண்டுமே அன்றி, வாராக் கடனை அடைப்பதற்குப் பயன்படுத்தலாமா? கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி இல்லையா? வேறு வழியில்லை, பயன்படுத்தலாம் என்பதைத்தான் மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி எடுத்துச் சொல்கிறது.
பங்குதாரர்கள் மத்தியில் இதற்கான அனுமதி பெறப்பட வேண்டாமா? வேண்டும். ஜனவரி 30 ம் தேதி நடைபெறவிருக்கும் அசாதாரண பொதுக்குழு சந்திப்பில் கடுமையான வாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், பங்குச் சந்தை இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. ஒன்பது சதவீத அளவுக்கு அதன் பங்கு விலைகள் உயர்ந்தன.
அதாவது, இனிமேல் அந்த வங்கியின் வரவுசெலவு கணக்கில் வாராக்கடன் சுமை இருக்காது. அதனால், லாபகரமாக இயங்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பங்குச் சந்தை வரவேற்றுள்ளதாகவே அர்த்தம்.வலக்கையில் இருந்தால் என்ன இடக்கையில் இருந்தால் என்ன? அந்தத் தொகை வங்கிக்குள் தானே இருக்கிறது என்பதே இங்கே சொல்லப்படும் லாஜிக்.
பெரும் நஷ்டமோ, முதலீட்டாளர்களுக்குப் பெரும் சேதமோ இல்லாமல், ‘தளுக்’க்காக கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் போதும், வங்கிகள் மீண்டுவிட்டால் போதும் என்ற மனப்பான்மை இங்கே செயல்படுவதாகவே தோன்றுகிறது.ஆனால், ஒரு கேள்வி மட்டும் மிச்சமிருக்கிறது. ஷேர் பிரிமியம் அக்கெளன்ட் என்பது நிச்சயம் ஏதேனும் ஒரு முக்கிய தேவையை ஒட்டியே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
வாராக்கடனை விட பெரிய இடர் ஏதேனும் ஒன்று தோன்றுமானால், அப்போது வங்கிகள் நிதியைத் திரட்ட எங்கே போகும்? பிற பொதுத் துறை வங்கிகளும் இதே நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கினால் என்ன விளைவு ஏற்படும்?
இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடலாம் என்று கவலை தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இப்போதையை வாராக்கடன் பிரச்னையைத் தீர்க்க, ஐ.ஓ.பி., ஒரு வழி கண்டுபிடித்துள்ளது என்பது மட்டும் உண்மை.
-– ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|