பதிவு செய்த நாள்
09 ஜன2018
01:13
புதுடில்லி;அடுத்த இரு ஆண்டுகளில், இந்திய பங்குச் சந்தைகளில், எஸ்.எம்.இ., பிரிவில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,000 ஆக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், 2012 மார்ச்சில், சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்கு வெளியீடு மற்றும் வர்த்தகத்திற்கு, எஸ்.எம்.இ., என்ற, தனிப்பிரிவு துவக்கப்பட்டது.
இதில், குறைந்தபட்சம், 1 கோடி ரூபாய் பங்கு மூலதனத்துடன், மூன்று ஆண்டுகளாக செயல்படும் நிறுவனங்கள், பங்கு வெளியீடு மேற்கொண்டு, பங்கு வர்த்தகத்தில் இணையலாம்.குறைந்த மூலதனம் கொண்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள், அவற்றின் வர்த்தகம் மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு, கடன் பெறாமல், பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டிக் கொள்ள, எஸ்.எம்.இ., பிரிவு உதவுகிறது.
இதனால், இப்பிரிவில் புதிய பங்கு வெளியீடுகள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2017ல், 132 சிறிய, நடுத்தர நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், சாதனை அளவாக, 1,785 கோடி ரூபாய் திரட்டி உள்ளன.
இது, 2016ல், 66 நிறுவனங்கள், 540 கோடி ரூபாய் திரட்டியதை விட, மூன்று மடங்கு அதிகம்; ஐந்து ஆண்டுகளில் திரட்டிய, 1,315 கோடி ரூபாயை விட, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, கின்னஸ் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், எஸ்.எம்.இ., பிரிவில், பங்குகளை பட்டியலிட்டுள்ள நிறுவனங்கள் எண்ணிக்கை, 350ஐ நெருங்கி உள்ளது. இது, அடுத்த இரு ஆண்டுகளில், 1,000 ஆக அதிகரிக்கும்.
விரிவாக்கம் மற்றும்நடைமுறை மூலதனதேவைகளுக்கு, பெருமளவு கடனை நம்பியிருந்த சிறிய, நடுத்தர நிறுவனங்களின் கொள்கையில், மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவை, ஆர்வமுடன், எஸ்.எம்.இ., பிரிவில் பங்கு வெளியீடு மேற்கொள்கின்றன. இது, நாட்டின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சியில், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.பல நிறுவனங்கள், சிறப்பாக வளர்ச்சி கண்டு, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் பட்டியலுக்கு மாறி வருகின்றன. எனவே, இச்சந்தைகளின் நுழைவாயிலாக, எஸ்.எம்.இ., பிரிவு விளங்குகிறது என்றால், அது மிகையல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விலை உயர்வு
கடந்த ஆண்டு, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின், எஸ்.எம்.இ., பிரிவில், 39 சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்குகள், வர்த்தகம் துவங்கிய நாளன்றே, 20 சதவீத விலை உயர்வு வரம்பை எட்டின.ஐந்து பங்கு வெளியீடுகளில், ௧௦0 மடங்கிற்கும் அதிகமாக, விண்ணப்பங்கள் குவிந்தன.மும்பை பங்குச் சந்தையின், 'சென்செக்ஸ்' மற்றும் தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி' குறியீடுகள், 2017ல், முறையே, 27 சதவீதம் மற்றும் 28 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. அதே வேளையில், எஸ்.எம்.இ., குறியீடுகள் வளர்ச்சி, முறையே, 89 சதவீதம் மற்றும் 67 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|