பதிவு செய்த நாள்
16 ஜன2018
01:17
புதுடில்லி:மந்தமடைந்துள்ள ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய பட்ஜெட்டில், ஜி.எஸ்.டி., குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை எதிர்நோக்கி உள்ளதாக, அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசின், பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் போன்ற சீர்திருத்தங்கள், நீண்ட கால அடிப்படையில், ரியல் எஸ்டேட் துறை, சிறப்பாக வளர்ச்சி காண உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேக்க நிலை
எனினும், இந்த நடவடிக்கைகளின் தற்காலிக தாக்கத்தால், ரியல் எஸ்டேட் துறை தேக்க நிலையை சந்தித்துஉள்ளது. இதனால், 2017ல், கட்டுமான நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய குடியிருப்புகள் எண்ணிக்கை, 1,03,570 ஆக சரிவடைந்து உள்ளது. இது, 2016ல், 1,75,822 ஆக இருந்தது.இந்த தொய்வில் இருந்து மீண்டெழ, மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ரியல் எஸ்டேட் துறையினர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:நிரஞ்சன் ஹிர்நந்தானி, தலைவர், தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கழகம்:பிப்., 1ல், 2018 – 19ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வெளியாகிறது. அதில், ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும், ஒரே சீராக, உள்ளீட்டு வரி பயனுடன், 6 சதவீத, ஜி.எஸ்.டி., நிர்ணயிக்க வேண்டும்.ரியல் எஸ்டேட் துறைக்கு, உட்கட்டமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இதன் மூலம், கட்டுமான நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இதனால், திட்டச் செலவு குறையும். மக்கள், குறைந்த விலையில் வீடு வாங்க முடியும்.
வரி விலக்கு
சுரேந்திர ஹிர்நந்தானி, தலைவர், ஹவுஸ் ஆப் ஹிர்நந்தானி:ஜி.எஸ்.டி., வந்த பின்னும், முத்திரைத் தாள் தீர்வை வசூலிக்கப்படுகிறது. இது, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இதனால், வீடு வாங்குவோரின் சுமை கூடுகிறது. மாநில அரசுகளின், முத்திரைத் தாள் தீர்வையை ரத்து செய்யலாம் அல்லது ஜி.எஸ்.டி., உடன் இணைக்கலாம்.ஜக்சே ஷா, தலைவர், கிரெடாய்:வீடு வாங்குவோருக்கு, குறைந்தபட்சம், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலாவது வருமான வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
சரோஜினி அஹுஜா, துணைத் தலைவர், டிரான்ஸ்கான் டிரையம்ப்:முதன்முறையாக வீடு வாங்குவோருக்கான வரிச்சலுகையை, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். முன், வீடு விற்பனைக்கு, 4.5 சதவீத சேவை வரி; 1 சதவீத மதிப்பு கூட்டு வரி என, 5.5 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது.தற்போது, 18 சதவீத, ஜி.எஸ்.டி.,யில், நில வரி கழிவு போக, 12 சதவீத வரி செலுத்த வேண்டி உள்ளது. இத்துடன், முத்திரைத் தாள் தீர்வை செலவும் உள்ளது.
ஆசிஷ் புர்வங்கரா, நிர்வாக இயக்குனர், புர்வங்கரா:நிலத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை அவசியம். நிலம் வாங்கும் செலவு குறைந்தால், இத்துறையில், தனியார் முதலீடுகள் பெருகும். புதிய கட்டுமான திட்டங்கள் அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|