பதிவு செய்த நாள்
18 ஜன2018
00:40
புதுடில்லி : மத்திய அரசு, கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை, மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், கூடுதலாக, 1.20 லட்சம், ‘லெட்டர்பேடு’ நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
போலி நிறுவனங்கள் மூலம், வங்கிக் கணக்கில் நடைபெறும், கறுப்புப் பண பரிவர்த்தனைகளை தடுக்கும் நடவடிக்கைகளை, மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன்படி, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நிதிநிலை அறிக்கை அளிக்காமலும், நீண்ட காலம் செயல்படாமலும் இருந்த, 2.26 லட்சம் நிறுவனங்களின் பதிவு, ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிறுவனங்களைச் சேர்ந்த, 3.09 லட்சம் இயக்குனர்கள், தகுதி இழப்பு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், விதிமீறல்களுக்காக, மேலும், 1.20 லட்சம் நிறுவனங்களை, இந்திய நிறுவனங்கள் பதிவாளர் பதிவேட்டில் இருந்து நீக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த, 2017 டிச., வரை, 2.26 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவற்றில், 1,157 நிறுவனங்கள், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகி உள்ளன. அதில், 180 நிறுவனங்களின் பதிவை புதுப்பிக்க உத்தரவிடப்பட்டது. இவற்றில், விதிமுறைப்படி விபரங்கள் வழங்கிய, 128 நிறுவனங்களின் பதிவு புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
நிறுவன இயக்குனர்களின் தகுதியிழப்பை எதிர்த்து, 992 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. அவற்றில், 190 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கையில், தகுதி உள்ள நிறுவனங்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கத்தில், ‘தாமத கணக்கு தாக்கல் மன்னிப்பு’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பதிவு ரத்தான நிறுவனங்கள், மார்ச், 31க்குள், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யலாம்.
அரசின் நடவடிக்கையால், அதிக அளவிலான நிறுவனங்கள், வரவு – செலவு விபரங்களை, எம்.சி.ஏ., 21 வலைதளத்தில் தாக்கல் செய்கின்றன. வலைதளத்தில், கணக்கு விபரங்களை குறித்த காலத்தில் தாக்கல் செய்து, வழக்குகளை தவிர்க்குமாறு, அனைத்து நிறுவனங்களின் செயலர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கை, நிறுவனங்கள் சிறப்பான நிர்வாக நடைமுறைகளை கடைபிடிக்கவும், அவற்றின் மீதான முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மை அதிகரிக்கவும் உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏமாற கூடாது:
கறுப்புப் பண ஒழிப்பு மட்டுமின்றி, நேர்மையற்ற மனிதர்கள், கார்ப்பரேட் நிர்வாக நடைமுறைகளை பயன்படுத்தி, அப்பாவி முதலீட்டாளர்களை ஏமாற்றக் கூடாது என்பதும், அரசின் நோக்கமாகும். புதிய இந்தியாவின் மிகச் சிறப்பான பொருளாதார வளர்ச்சிக்கு, நிறுவனங்களின் வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற நிர்வாக செயல்பாடுகள், அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
-பி.பி.சவுத்ரி, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|