பதிவு செய்த நாள்
22 ஜன2018
05:20
தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி தொடர்ந்து ஏழாவது வாரமாக உயர்வை சந்தித்தது. கடந்த வாரம் உயர்ந்து, புதிய வரலாற்று உச்சமான, 10,900 புள்ளிகளை கடந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாத ஆரம்பத்தில், 8,210 புள்ளிகளுடன் துவங்கிய குறுகிய கால உயர்வு, தற்போது தொடர்ந்து நீடிக்கிறது. இருப்பினும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் விலையில் சரிவு காணப்படுகிறது.கடந்த காலங்களில் உயர்வு பெறாத தொழில்நுட்பம் மற்றும் வங்கி பங்குகள், தற்போது நல்ல விலை உயர்வை சந்தித்து வருகின்றன. மேலும், இந்த ஆண்டில், தொழில்நுட்பத் துறை வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், வங்கி பங்குகள் உயர்ந்த வண்ணம் உள்ளன.நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கைகளைப் பொறுத்தவரை, பல முன்னணி நிறுவனங்களின் அறிவிப்புகள் இந்த வாரம் வரவிருக்கின்றன. இதில், ஆக்சிஸ் பேங்க், கனரா பேங்க், எல்.ஐ.சி., மற்றும் பி.என்.பி. ஹவுசிங் பைனான்ஸ், விகார்டு, ஹேவல்ஸ் போன்ற நிறுவனங்களும் அடங்கும். வியாழன் அன்று எப் அண்டு ஓ செட்டில்மென்ட் நாள். வெள்ளியன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ஆகும்.இந்த வாரம் பல முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது, 17 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபரும், 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரும், உலக பொருளாதார கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.ஐரோப்பிய மத்திய வங்கி, பேங்க் ஆப் ஜப்பான் போன்றவற்றின் வட்டி விகிதம் குறித்த நிதிக் கொள்கை கூட்டம் இந்த வாரத்தில் நடைபெற உள்ளது. இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சந்தையில் தாக்கத்தை உண்டாக்கும்.அமெரிக்க பங்குச் சந்தையில், டவ் ஜோன்ஸ், 26 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இதை பின்பற்றி, நிப்டியும் மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாக, 11 ஆயிரம் புள்ளிகளை கடக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.அமெரிக்க சபையில், குறுகியகால செலவின பில் நிறைவேற்றப்படாமல் அரசு முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக, 2013 மற்றும் 1995ம் ஆண்டுகளில் அமெரிக்க அரசு சில நாட்களுக்கு முற்றிலும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நிப்டியை பொறுத்தவரை ரெசிஸ்டென்ஸ், 11,143 மற்றும் சப்போர்ட், 10,710 ஆகும்.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் சிறிய சரிவில் முடிவடைந்தது. நான்கு வார தொடர் உயர்வுக்கு பிறகு எண்ணெய் விலையானது, மூன்று ஆண்டு உச்ச விலையான, ஒரு பேரல், 65 அமெரிக்க டாலர் என்பதை எட்டியது. இருப்பினும், பெருகி வரும் அமெரிக்க எண்ணெய் உற்பத்தியை கண்டு, முதலீட்டாளர்கள் மற்றும் வியாபாரிகள் பொருள் வாணிப சந்தையில் தங்களது கொள்முதலை விற்பனை செய்தனர். இதனால் கடந்த வெள்ளியன்று ஒரு சதவீத விலை சரிவு நேர்ந்தது.இ.ஐ.ஏ., அமைப்பு, அமெரிக்க தினசரி உற்பத்தி கடந்த வாரம், 9.75 மில்லியன் பேரல்கள் உயர்ந்ததாக தகவல் வெளியிட்டது. மேலும், 747 ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகள் இயங்கி வருகின்றன. எனினும், இந்த விலை சரிவு தற்காலிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.எண்ணெய் விலையைப் பொறுத்தவரை, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகள் விலையேற்றம் கண்ட ஆண்டுகளாகும். இதற்கு முந்தைய இரு ஆண்டுகளின் சரிவுக்குப் பிறகு மீண்டும் விலை உயர்ந்தது.கடந்த, 2016 ஜனவரி மாதம், ஒரு பேரல், 26.19 டாலர் என்பதில் இருந்து கணிசமாக உயர்ந்து, தற்போது ஒரு பேரல், 65 டாலர் என்ற விலையை எட்டியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம், ஒபெக் மற்றும் ஒபெக் அமைப்பில் இல்லாத நாடுகள் ஒருங்கிணைந்து, தினசரி 1.8 மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்கு உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது தான். உற்பத்தி குறைப்பு மீண்டும் ஓர் ஆண்டுக்குஅதாவது, டிசம்பர் 2018 வரை நீட்டிக்க பின் முடிவு செய்யப்பட்டது. இதை உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவுதி மற்றும் ரஷ்யா ஆதரித்ததன் காரணமாக, விலையேற்றம் அடைந்தது.வரும் நாட்களில் விலை, 65 டாலரை கடக்க இயலாத நிலையில், சிறிய இறக்கத்தை காண நேரலாம். இந்த அளவை கடந்தால் மட்டுமே, மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு அடையும்.
தங்கம், வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை, கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் முதல் தொடர்ந்து நான்கு வாரங்கள் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கம், 1,344 டாலர் என்பதை எட்டியது. ஒரு அவுன்ஸ் என்பது 31.104 கிராம் ஆகும். அமெரிக்க நாணய குறியீடான, டாலர் இன்டெக்ஸ் வீழ்ச்சி மற்றும் அரசு கருவூலங்களின் ஆதாயம் குறைவு மற்றும் அமெரிக்க பத்திரங்களில் சீனாவின் முதலீடு குறைவு ஆகியவை காரணமாக, தங்கம் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க பத்திரங்களில் அதிகளவில் முதலீடு செய்யும் நாடு சீனாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், தொடர் உயர்வுக்கு பிறகு கடந்த வாரம் வியாபாரிகள் மேற்கொண்ட லாபம் எடுத்தல் காரணமாக விலை சரிந்து வர்த்தகமாகியது.பொருள் வாணிப சந்தையில், தங்கம் முதலீட்டை காட்டிலும், ஈ.டி.எப்., எனப்படும் முதலீடு, கடந்த 2013ம் ஆண்டின் உச்சத்தை எட்டியது. அமெரிக்காவின் எஸ்.பி.டி.ஆர். தங்க பங்குகள் முதலீடு, 2,300 டன்னை எட்டியது. மேலும் தற்போது விரைந்து உயர்ந்து வரும், பிட்காயின் விலை சரிவும், கடந்த வாரங்களில் தங்கம் விலை உயர ஒரு காரணம் என்று கூறலாம்.சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டம் இம்மாத இறுதியில் துவங்கி, பிப்ரவரி 16ம் தேதி முடிவடைய உள்ளது. இதற்காகவும் தங்கம் கொள்முதல் அதிகரித்தது.கடந்த வெள்ளியன்று அமெரிக்க அரசு முடக்கப்படும் என்ற தகவல் வெளியானது. வாஷிங்டன் வெள்ளை மாளிகை மூடப்படும், இதனால் குறுகிய கால கடன் அளிப்பு பில் செனட் சபையில் நிறைவேற்றப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு முன், 2013ம் ஆண்டு சில நாட்களுக்கு மூடப்பட்டு இருந்தது, தற்போது இதை தவிர்க்க டிரம்ப் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.இவ்வாறான அசாதாரண சூழல், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பு
செம்பு விலையானது, தொடர்ந்து மூன்று வாரங்களாக சரிந்து வருகிறது. லண்டன் பொருள் வாணிப சந்தையில் ஒரு டன், 7,312 டாலர் என்ற நிலையை, டிசம்பர் 24ம் தேதி அன்று எட்டியது. அதன் பிறகு வியாபாரிகள் லாபம் ஈட்டுதல் விளைவாக, விலையில் சரிவு ஏற்பட்டது.கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் செம்பு, 7.2 சதவீதம் விலை உயர்ந்தது. இதுகடந்த எட்டு ஆண்டில் பெரிய மாத உயர்வு ஆகும்.முன்னணி செம்பு சுரங்கமான, ரியோ டிண்டோ உற்பத்தி கடந்த, 2017ம் ஆண்டு 9 சதவீதம் அளவுக்கு குறைந்து 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 100 டன்கள் ஆனது. இதுவும் விலைக்கு சாதகமாக அமைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|