பதிவு செய்த நாள்
22 ஜன2018
05:22
2018 – 19ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு துறையினரும், தரப்பினரும் தங்கள் எதிர்பார்ப்புகளை முன்வைத்து வருகின்றனர்.நிதி அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தொழில் அமைப்புகள் தங்கள் எதிர்பார்ப்புகளை மனுவாகவே கொடுத்துள்ளன. நம்மைப் போன்ற தனிநபர்கள், மத்தியமர்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன?வருமான வரி உயர்வுஆண்டு வருவாய், 2.5 லட்சம் வரை, வரி ஏதும் இல்லை. இதை 5 லட்சம்வரை உயர்த்தலாமே என்பது பலரது ஆசை. குறைந்தபட்சம் 3 லட்சம் வரையாவது, அருண் ஜெட்லி உயர்த்துவார் என்பதே எதிர்பார்ப்பு.ஐந்து முதல், 10 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு, 20 சதவீதமும், 10 லட்சத்துக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு, 30 சதவீதமும் வரி தற்போது விதிக்கப்படுகிறது.இதில் மாற்றம் வரும் என்பது இன்னொரு எதிர்பார்ப்பு. 20 லட்சத்துக்கு மேல், 30 சதவீதமும், 10 – 20 லட்சம் வருவாய் ஈட்டுபவர்களுக்கு, 20 சதவீதமும் வரி வசூல் செய்யப்படலாம்.இதனால், 5 – 10 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள், 10 சதவீத வரி மட்டுமே செலுத்தினால் போதும். மக்கள் கையில் கொஞ்சம் சேமிப்பு இருக்கும் என்பதே இதன் பின் இருக்கும் நியாயம்.வரி சேமிப்புஇப்போது, இ.பி.எப்., –பி.பி.எப்., தேசிய சேமிப்புப் பத்திரங்கள், ஆயுள் காப்பீடு போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகளுக்கு, 80சி.,யின் கீழ், 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கிறது.இதில் இன்னும், 5௦ ஆயிரம் ரூபாயோ, ஒரு லட்சம் ரூபாயோ கூடுதல் வரிவிலக்கு கிடைக்கலாம்.இப்படிச் செய்வதன் மூலம், மத்தியமர்கள் கூடுதலாக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவர். அந்தத் தொகை பெரும்பாலும் பங்குச் சந்தைக்கு வந்துசேரும். அதனால், பொருளாதாரம் மேம்பட வாய்ப்புண்டு என்பது ஒரு கணக்கு.இன்னொரு வரிசேமிப்பு, வீட்டுக் கடன் வட்டிக்குக் கிடைக்கும் விலக்கு. இப்போது, 2 லட்சம் ரூபாய் வரையுள்ள வரிவிலக்கு, 3 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படலாம். அதேபோல், பிரின்சிபல் தொகையில், 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் விலக்கு, 1 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படலாம்.சலுகைகள்இவையில்லாமல் மக்கள்கையில் இன்னும் கொஞ்சம் பணம் சேர வேண்டுமென்றால், பின்வரும் விஷயங்களையும் வரவிருக்கும் பட்ஜெட் கணக்கில் எடுத்துக்கொண்டால் உபயோகமாக இருக்கும்.1 மருத்துவத்துக்காக ஆகும் செலவில், 15 ஆயிரம் வரை திரும்பப் பெறும் வசதியை சில நிறுவனங்கள் வழங்குகின்றன. இது, 1999ல் நிர்ணயிக்கப்பட்ட தொகை. இதை உயர்த்தலாம். அதேபோல் வீட்டு வாடகைப் படி, பயணப் படி, குழந்தைகளின் கல்விக்காகக் கொடுக்கப்படும் தொகைகளும் உயர்த்தப்பட வேண்டும்.2மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்கான வட்டித் தொகையை, எட்டு ஆண்டுகள் வரை காண்பித்து, 80இ கீழ் வரி விலக்கு பெறலாம். அதை இன்னும் சில ஆண்டுகள் நீட்டிக்கலாம்.3வங்கிகளில் வழங்கப்படும் வட்டித் தொகை 10 ஆயிரத்துக்கு மேல் போனால், டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த அளவு 1997 நிர்ணயிக்கப்பட்ட தொகை. இதை இப்போது இன்னும் உயர்த்திக் கொடுக்கலாம். இதன் மூலம், மக்கள் கையில் இன்னும் கொஞ்சம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.4மூத்த குடிமக்கள் போட்டிருக்கும் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு கூடுதலான வரிவிலக்கு வழங்கப்படுவதோடு, அவர்களுடைய மருத்துவ செலவுகளுக்கு என்று கூடுதல் விலக்கும் அளிக்கப்பட வேண்டும்.5தற்போது, 3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள, லீவ் என்கேஷ்மென்ட் தொகையை, 10 லட்சம் ரூபாய் வரையிலும் உயர்த்த வேண்டும். இந்த உச்ச பட்ச தொகை நிர்ணயிக்கப்பட்டது, 1998ல். இப்போதும் இதே தொகை இருப்பதில் அர்த்தமில்லை.6பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் பிள்ளைகளுக்குக் கூடுதல் சலுகை வழங்கப்படலாம். பெற்றோர்களின் மருத்துவச் செலவு, இதர செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, பிள்ளைகளுக்கான வரிவிலக்கை அதிகப்படுத்தலாம்.முக்கிய முன்னேற்றங்கள்இவையில்லாமல் பின்வரும் மூன்று அம்சங்களும் கூடுதல் கவனம் பெறுகின்றன.7குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு 2016ல் உயர்த்தியது. அன்றாடக் கூலியாக, 350 ரூபாயைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மாதத்துக்கு, 9,100 ரூபாய் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அது வரும் பட்ஜெட்டில், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்பது எதிர்பார்ப்பு. வணிகர் அமைப்புகள், அது, 21ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றன.8தேசிய வேலைவாய்ப்பு கொள்கை ஒன்றை மத்திய அரசு பட்ஜெட்டில் வெளியிடும் என்பது இன்னொரு எதிர்பார்ப்பு. பெருநிறுவனங்களோடு, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்குத் தேவையான ஊக்கத்தை வழங்குவதற்கு இந்த கொள்கை வழிசெய்யும்.9திறன் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதி, இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்படும் என்பது இன்னொரு அவா. 2022க்குள் 40 கோடி பேருக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றது மத்திய அரசு. அதை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரத்தை அரசு உயர்த்த வேண்டும்.ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் பெரும் ஆவலுக்குரியவை. உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை பட்ஜெட் சொல்லிவிடும். அரசுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. தங்களுடைய முயற்சிகளைப் பறைசாற்றிக்கொள்ளும் அறிக்கை இது.வரும், 2019ம் ஆண்டு, பொதுத் தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டு வழங்கப்படும் பட்ஜெட் தான் இந்த ஆட்சியின் முழுமையான பட்ஜெட். மக்களுக்குத் தேவை ‘பொருளாதார அமைதி.’ தாம் சுபிட்சமாக இருக்கிறோம் என்ற நம்பிக்கை. பட்ஜெட் தான் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மத்தியமர்கள் அதற்குத் தான் காத்திருக்கின்றனர்.-– ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|