பதிவு செய்த நாள்
25 ஜன2018
02:49
டாவோஸ் : ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றுக்கு பின், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்வதில்,தீவிரமாக உள்ளோம்,’’ என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்தின், டாவோஸ் நகரில், சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறைகளில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், ஓர் அங்கமாக, அதிகளவில் இணைகின்றன. இதனால், பல்வேறு பிரிவுகளில், மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கான சூழல் உருவாகி உள்ளது.மத்திய அரசும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அதிகளவில் கடன் வழங்குவதை ஊக்குவிக்கிறது. வங்கிகளின் கடன் வளர்ச்சி பாதிப்பும், வாராக்கடன் பிரச்னையும், அவற்றின் பிரதான நிதிச் சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், பொதுத் துறை வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய்க்கு, மறு பங்கு மூலதன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இதன் காரணமாகவும், அரசின் கட்டமைப்பு திட்டங்கள் புத்துயிர் பெற்று வருவதாலும், முதலீடுகளுக்கான சூழல், மேலும் மேம்படும். இதனால், தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்கும்.இத்தகைய வளர்ச்சியில் பங்கேற்கவே, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி விரும்புகிறது. சர்வதேச வங்கி என்பதால், பொருளாதாரத்தில் உருவாகும் ஒவ்வொரு வளர்ச்சி வாய்ப்பையும், வங்கி இதுவரை பயன்படுத்தி வந்துள்ளது.போட்டி நிறைந்த நிதித் துறையில், தொழில்நுட்ப பயன்பாட்டில், வங்கி, முதலிடத்தில் உள்ளது. வங்கியின் சில்லரை கடன் பிரிவு, 18 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. அதனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தகம் குறைந்தாலும், இதர பிரிவுகளில், வங்கியின் வளர்ச்சி நன்கு உள்ளது.இடர்ப்பாட்டு கடன்களுக்கு தீர்வு காண்பதிலும், வங்கி முன்னிலையில் உள்ளது. தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில், முதன்முதலாக, வாராக்கடன் வழக்கை கொண்டு சென்ற சிறப்பும், வங்கிக்கு உள்ளது.தற்போது, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி, வாராக்கடன் தொடர்பாக, ஏராளமான நிறுவனங்களின் வழக்குகளை, தீர்ப்பாயம் விசாரிக்கிறது.நிறுவன திவால் சட்டம், வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையை பெருமளவு குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், வங்கிகள், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும். வாராக்கடன்கள் குறித்து, வங்கிகள் காலம் தாழ்த்தாது முடிவு எடுத்தால், சொத்து மதிப்பின் இழப்பை குறைக்கலாம். வங்கி துறையை பொறுத்தவரை, வாராக்கடன்களுக்கு தீர்வு காண்பதிலும், கடன் மீட்பு நடவடிக்கைகளிலும், இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
போட்டி நிறைந்த நிதித் துறையில், தொழில்நுட்ப பயன்பாட்டில், வங்கி, முதலிடத்தில் உள்ளது. வங்கியின் சில்லரை கடன் பிரிவு, 18 சதவீதத்திற்கும்அதிகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. அதனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தகம் குறைந்தாலும், இதர பிரிவுகளில், வங்கியின் வளர்ச்சி நன்கு உள்ளது.--ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|