பதிவு செய்த நாள்
30 ஜன2018
00:18
புதுடில்லி : ‘சாலை, ரயில், கப்பல் ஆகியவற்றின் வாயிலாக நடைபெறும் சரக்கு போக்குவரத்துக்கு, ஒரே ஜி.எஸ்.டி., நடைமுறையை அமல்படுத்த வேண்டும்’ என, இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ மத்திய வர்த்தக அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பினர் கூறியதாவது: வாகன நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளை சாலை, ரயில், கப்பல் மூலம் அனுப்புகின்றன. சாலை மார்க்கத்தில் கொண்டு செல்லப்படும் வாகனங்கள், சரக்கு ரயிலுக்கு மாற்றப்பட்டு, மீண்டும் கனரக வாகனங்கள் மூலம், துறைமுகம் வாயிலாக, கப்பலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வகையில், வாகன ஏற்றுமதியில் சாலை, ரயில் மற்றும் கடல் வழி போக்குவரத்தின் ஒருங்கிணைந்த பங்களிப்பு உள்ளது.
ஒரு வாகன தொகுப்பை விற்பனைக்கு அனுப்புவதில், இத்தகைய பல நிலைகளில் நடைபெறும் போக்குவரத்திற்கு, உள்ளூர் வரி உட்பட பல வகை வரிகள் வசூலிக்கப்படுகின்றன. மேலும், பன்முக சரக்கு போக்குவரத்தில், தயாரிப்பு நிறுவனங்கள், அந்தந்த போக்குவரத்துக்கான ஆவணங்களையும் தயாரிக்க வேண்டியுள்ளது. ஒருங்கிணைந்த, பன்முக சரக்கு போக்குவரத்து தொடர்பான, தற்போதைய ஜி.எஸ்.டி., சட்டம், வரி ஆலோசகர்கள் அல்லது வரித் துறை வல்லுனர்களின் முடிவை பொறுத்ததாக உள்ளது.
எனவே, சாலை, ரயில், கப்பல் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் மேற்கொள்ளும் பன்முக சரக்கு போக்குவரத்தை, தனித்தனியே பிரித்து பார்க்காமல், ஒரே போக்குவரத்தாக கருதி, ஜி.எஸ்.டி., நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய நடைமுறை அமலுக்கு வந்தால், நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளை, ஒரே ஆவணம் மூலம் விரைவாகவும், சுலபமாகவும், விற்பனையாளரிடம் கொண்டு சேர்க்க முடியும். இதனால், நேரமும், பணமும் மிச்சமாகும்.
தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஒரு வாகனம், ஒரே ஆவணம் மூலம் சாலை, ரயில், கப்பல் மூலம் இறுதியாக விற்பனையாளரை சென்றடைய வழி செய்ய வேண்டும் என, மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னை, ஜி.எஸ்.டி., கவுன்சில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என, அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பன்முக வாகன போக்குவரத்துக்கு, ஒரே ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும் என, ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து செலவினங்களை குறைப்பது தொடர்பாக, சிறப்பு செயலர் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வேலைவாய்ப்பு:
நாட்டின் சரக்கு போக்குவரத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில், தற்போதைய, 16 ஆயிரம் கோடி டாலரில் இருந்து, 21 ஆயிரத்து 500 கோடி டாலராக வளர்ச்சி காணும். கடந்த ஐந்து ஆண்டுகளில், இத்துறையின் வேலைவாய்ப்பு, ஆண்டுக்கு, 7.8 சதவீத சராசரி வளர்ச்சியுடன், 2.20 கோடியாக உயர்ந்துள்ளது என, மத்திய அரசின் பொருாளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|