பதிவு செய்த நாள்
19 பிப்2018
02:31
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மாபெரும் ஊழல் வெளிவந்ததும், பங்குச் சந்தையில் அந்த பங்கின் விலை தொடர்ந்து சரிந்தது. அனைத்து பொதுத் துறை வங்கி பங்குகளின் விலையும் சரிந்து, ஒட்டுமொத்த வங்கி துறையின் எதிர்காலம் மீது, ஒரு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. முதலீட்டாளர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆழ்ந்த கவலையில் மூழ்கி உள்ளனர்.
இந்த நேரத்தில், வங்கி துறை பங்குகளை எப்படி அணுக வேண்டும்? முதலீட்டாளர்களுக்கு, இந்த ஊழல், ஒரு அவசரநிலையாக அமையுமா? பொதுத் துறை வங்கி ஊழல்களுக்கு தீர்வே இல்லையா? ரிசர்வ் வங்கிக்கும், அரசுக்கும் இந்த ஊழல் ஏற்படுத்தும் சிக்கல்கள் எத்தகையவை? இப்படி பல கேள்விகள் கவலைகளாக மாறியுள்ளன.ஆட்சி பொறுப்பாளர்கள் எப்போதுமே கேள்விக்கு ஆளாவது இயற்கையே. முதலீட்டாளர் கோபம் முழுவதும் ஆட்சி பொறுப்பாளர் பக்கம் பாய்வது, சந்தையில் எதிர்பார்க்கப்பட்ட இயல்பான நிலைப்பாடு.
வங்கி துறை சார்ந்த பிரச்னைகள், கடந்த பல ஆண்டுகளாக இருந்த போதும், அவை கடந்த இரண்டு ஆண்டுகளாக விஸ்வரூபம் எடுக்கத் துவங்கி இருப்பதை மறுக்க முடியாது.ரிசர்வ் வங்கியும், அரசும் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, தொடர்ந்து வழிமுறைகளை வகுத்து அமல்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.இருந்தும், ஒரு சிக்கலை தீர்த்து வைக்கும் முயற்சி முன்னேற்றம் காணும் போது, இன்னொரு புதிய பிரச்னை உருவெடுத்து, புதிய நிர்ப்பந்தங்களை சுமத்துவது நம் வரலாற்றில் ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்தி விடுகிறது.
இதைத் தாங்கிக்கொள்ளும் மனோதிடம் எல்லா முதலீட்டாளர்களுக்கும் இருக்காது. அரசையும், ரிசர்வ் வங்கியையும் முதலீட்டாளர் தரப்பில் இருந்து, ஆய்வாளர்கள் பல கேள்விகளை கேட்கத் துவங்கியுள்ளனர்.இந்த ஊழல் விசாரணை நிலையில் உள்ளதால், இது பற்றிய குறிப்பான தகவல்கள் எளிதில் வெளிவராது. ஆனால், இந்த சூழலில் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவது மட்டுமே, அரசின் மதிப்பைக் காப்பாற்றும்.அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றம், மக்கள் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும். அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் அவசர தேவை அரசுக்கு இருக்கிறது. இதுவே, அரசியல் நெருக்கடிகளையும் தவிர்க்கும்.
ரிசர்வ் வங்கி, இந்த நேரத்தில் துணிச்சலான பல முடிவுகளை எடுத்து வருகிறது. வாராக் கடன்களை அணுகும் முறைகளில், வங்கிகளை தீவிர மாக நிர்ப்பந்தித்து வருகிறது. மேலும், என்.சி.எல்.டி., என்ற புதிய அமைப்போடு சிக்கல்களுக்கு தீர்வு காண, அரசு அதிவேகமாக முனைந்துள்ளது. இந்த முயற்சியில் வெளிப்படும் முன்னகர்வுகள் வரலாறு காணாதவை.பல வாரா பெருங்கடன்களில் தீர்வு காணும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், பொதுத்துறை வங்கிகளுக்கு நெடுங்கால நன்மைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், முதலீட்டாளர்களின் சந்தேகங்களையும், அச்சங்களையும் களைய இவை மட்டுமே போதாது. பொதுத் துறை வங்கி சீர்திருத்தத்திற்கான அடுத்த கட்டத்தை உடனே வேகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.வங்கி ஊழல் சார்ந்த அவசர நடவடிக்கைகள், வங்கி இணைப்புகள், தொழில்நுட்ப சீர்திருத்தங்கள், ஊழியர் நேர்மை சார்ந்த நகர்வுகள், செலவு குறைப்பு, சொத்து விற்பனை என, கிட்டத்தட்ட ஒரு, ‘டி – 20’ கிரிக்கெட் ஆட்டத்தின் வேகத்தில் நகர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை.
இத்தகைய சூழல், சீர்திருத்தங்களுக்கு பொருத்தமானது என்பதே இந்த நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல். அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, அதிவேக மாற்றங்களை ஏற்படுத்தப் போவது உறுதி. அத்தகைய சூழலில், சந்தையும் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக் கூடும். இனி வரும் முக்கிய கொள்கை முடிவுகளை, சந்தை கூர்ந்து கவனிக்கும். மாற்றம் வேகம் பிடிக்கும் தருணம் இது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|