பதிவு செய்த நாள்
24 பிப்2018
00:42
மும்பை : ஆயுள் காப்பீட்டு துறை, வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு ஏற்ப, அத்துறையில், காப்பீடு கோரிக்கை சார்ந்த நிதி மோசடிகளும் பெருகி வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
‘எர்னஸ்ட் யங்’ நிறுவனத்தின் மோசடி புலனாய்வு மற்றும் தகராறு சேவைகள் பிரிவு, பொது மற்றும் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பணியாற்றும், 100க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தி, வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆயுள் காப்பீட்டு துறையில், மூன்றாம் நபர் இழப்பீடு சார்ந்த பரிவர்த்தனைகள் அதிகரித்து உள்ளன. இத்துறையில், ‘டேட்டா’ எனப்படும், தரவுகள் பாதுகாப்பும் கவலைக்குரியதாக உள்ளது. இழப்பீடு கோரும் நடைமுறைகளிலும், ஏகப்பட்ட ஓட்டைகள் உள்ளன. இது போன்ற காரணங்களால், ஆயுள் காப்பீட்டு துறையில், நிதி சார்ந்த மோசடிகள் அதிகரித்துள்ளன. இரு ஆண்டுகளில், இத்தகைய மோசடிகள், 30 சதவீதம் வரை உயர்ந்து உள்ளதாக, 56 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
ஆய்வில், மூன்றில் இருவர், தங்கள் நிறுவனம், ஊழலை வெளிப்படுத்துவோர் தொடர்பான செயல் திட்டங்களை, முழுமையாக மேற்கொள்ளாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளனர். மூன்றாம் நபர் இழப்பீடு தொடர்பான நடைமுறைகளை மேம்படுத்தி, தடுப்பு அரண்களை சரிவர ஏற்படுத்தாமல் உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்தியாவில், மிக அதிகமாக உள்ள இளம் தலைமுறையினரும், அவர்களிடம் புழங்கும் அதிக செலவழிப்பு வருவாயும், ஆயுள் காப்பீட்டு துறையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இத்தகைய சூழலில், நிதி மோசடிகளை தடுக்க, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும். தரவுகளின் பாதுகாப்பை பலப்படுத்தி, நிர்வாக நடைமுறைகளை கடுமையாக்கினால், நிதி மோசடிகளின் இடர்ப்பாட்டை குறைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|