பதிவு செய்த நாள்
24 பிப்2018
00:44
புதுடில்லி : ‘பொதுத் துறையில், இரண்டு அல்லது மூன்று வங்கிகளை தவிர்த்து, எஞ்சியவற்றை, தனியார் மயமாக்க வேண்டும்’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘பிக்கி’ மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
சமீபத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11,400 கோடி ரூபாய் மோசடி வெளியானது. நாட்டையே உலுக்கிய இந்த மோசடிக்கு காரணமான, தொழிலதிபர் நிரவ் மோடி, குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அவர் நிறுவனங்களுக்குச் சொந்தமான, 5,100 கோடி ரூபாய் சொத்துகளை, அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. மேலும், பல சொத்துகளை கண்டுபிடித்து, முடக்கும் பணி நடக்கிறது.
இந்நிலையில், மோசடி தொகையை திரும்பச் செலுத்தும் வழிகளை ஆராயுமாறு, நிரவ் மோடிக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கி கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் அவரோ, ‘மோசடி தொகை, மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது; 5,000 கோடி ரூபாய்க்குள் தான், நான் செலுத்த வேண்டியது இருக்கும்’ என, கூறியுள்ளார். ஆகவே, மோசடி தொகையில், மேலும் பலருக்கு உள்ள தொடர்பு, விரைவில் தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியை போல, கடன் பொறுப்பேற்பு கடிதங்கள் மூலம் மோசடி நடைபெற்று உள்ளதா என்ற ஆய்வை, வங்கித் துறை மேற்கொண்டு உள்ளது. ஏற்கனவே, 9.46 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் பிரச்னையில் சிக்கி உள்ள வங்கித் துறைக்கு, மோசடி விவகாரம் பெரும் தலைவலியாக உருவெடுத்து உள்ளது. இது போன்ற மோசடிகளை தடுக்கவும், வங்கி நிர்வாகத்தை திறம்பட மேற்கொள்ளவும், பொதுத் துறை வங்கிகளில், மத்திய அரசின் பங்கு மூலதனத்தை, 50 சதவீதத்திற்கும் கீழாக குறைக்க வேண்டும் என, சமீபத்தில், இந்திய தொழிலக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ‘பிக்கி’ தலைவர், ராஷேஷ் ஷா, நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை சந்தித்து, பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து பேசினார்.
இது குறித்து, ‘பிக்கி’ அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், இரண்டு அல்லது மூன்று வங்கிகளை மட்டும் வைத்து, மற்றவற்றை, படிப்படியாக தனியார் மயமாக்க வேண்டும் என, அருண் ஜெட்லியிடம், ராஷேஷ் ஷா வலியுறுத்தினார். பொதுத் துறை வங்கிகளின் பிரச்னைகள், மிக ஆழமானவை. அவற்றுக்கு, மத்திய அரசு அளிக்கும், 2.11 லட்சம் கோடி ரூபாய் மறு பங்கு மூலதன திட்டத்தில் கூட, தீர்வு காண முடியாது. ஆகவே, சிறந்த நிர்வாகம் மற்றும் பொறுப்புணர்வுடன், குறைவான வாராக்கடனில் செயல்படும், தனியார் வங்கிகளை போல, பொதுத் துறை வங்கிகளை மாற்ற வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு:
தனியார் வங்கிகளில், மோசடிகள் மிகக் குறைவாக உள்ளன. அதனால், பொதுத் துறை வங்கிகளை, தனியார் மயமாக்கும் திட்டத்தை, நான் வரவேற்கிறேன்.
-அதி கோத்ரெஜ், தலைவர், கோத்ரெஜ் குழுமம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|