பதிவு செய்த நாள்
01 மார்2018
07:47
புதுடில்லி, மார்ச் 1–ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில், இந்தாண்டு, பல்வேறு துறைகளில் பணியாற்றுவோருக்கு, அதிக ஊதிய உயர்வு வழங்குவதில், இந்தியா முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும் பிடிக்கும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.டில்லியைச் சேர்ந்த, ‘ஏ ஆன் இந்தியா கன்சல்டிங்’ நிறுவனம், ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில், தொழில் முறை சேவைகள், வாகன தயாரிப்பு உட்பட, 20 துறைகளைச் சேர்ந்த, 1,000 நிறுவனங்களில், ஊதிய உயர்வு குறித்து, ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில், 2017ல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் சராசரி ஊதிய உயர்வு, 9.3 சதவீதமாக இருந்தது.இது, இந்தாண்டு, 9.4 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.ஆசிய – பசிபிக் பிராந்தியத்திலேயே, ஊதிய உயர்வு விகிதத்தில், இந்தியா, முதலிடத்தில் உள்ளது. சீனா, 6.4 சதவீதத்துடன், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.சிறப்பாக செயல்படும் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்க, நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் ஊழியர்களுக்கு, சராசரியாக, 15.4 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கிறது. இது, சாதாரண ஊழியர் பெறும் ஊதிய உயர்வை விட, 1.9 மடங்கு அதிகம்.அதே சமயம், அதிக ஊதியம் பெறுவோர் வளர்ச்சி விகிதமும் குறைந்து வருகிறது. நிர்வாகத்தில், தலைமை பொறுப்பில் உள்ளோர் மற்றும் மூத்த நிர்வாகிகளின் ஊதிய விகிதம் குறைந்துள்ளது.இந்தாண்டு, அக்கவுன்டன்ட், வழக்கறிஞர், நிர்வாக ஆலோசகர், முதலீட்டு மேலாளர் உள்ளிட்டோர் அடங்கிய, தொழில் முறை சேவைகள் துறையில் தான், அதிகபட்சமாக, 10.6 சதவீத ஊதிய உயர்வு இருக்கும்.இந்த வகையில், ஐந்து துறைகளின் ஊதிய உயர்வு, இரட்டை இலக்க சதவீதத்தை கொண்டிருக்கும்.இந்திய பொருளாதாரம், பரவலாக மேம்பாடு கண்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தும், கடந்த நிதியாண்டை போன்றே, இந்தாண்டின் ஊதிய உயர்வு இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நிறுவனத்தின் அளவு, அதன் வர்த்தகம், தேவைப்படும் திறமையான பணியாளர்கள் உள்ளிட்ட அம்சங்கள் தான், ஊதிய உயர்வை தீர்மானிக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|