பதிவு செய்த நாள்
06 மார்2018
01:04
புதுடில்லி:மத்திய அரசு, நிதி தொழில்நுட்பத் துறை பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, வளர்ச்சிக்கான வழிமுறைகளை உருவாக்க, உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மின்னணு வாயிலான வர்த்தகச் செயல்பாடுகள், பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றை கொண்டுள்ள, நிதி தொழில்நுட்பத் துறையில், இதர வளரும் நாடுகளை விட, இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது.இதையொட்டி, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, மத்திய பட்ஜெட்டில், ‘நிதி தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த, உயர்மட்டக் குழு அமைக்கப்படும்’ என, தெரிவித்திருந்தார்.அதன்படி, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தலைமையில், எட்டு உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழு, உலகளவிலும், உள்நாட்டிலும், நிதி தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்து, பொதுவான செயலாக்க கருத்துருவை உருவாக்கும்.இத்துறையில், சுலபமாக தொழில் துவங்கும் வழிமுறைகளையும், தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான காரணிகளையும் ஆராயும்.அத்துடன், நிதி தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, பல்வேறு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் விதிமுறைகள் குறித்தும் பரிசீலிக்கும்.இத்துறையினர், அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்படும்.
குறைந்த விலை வீடுகள் திட்டம், அடித்தட்டு மக்களுக்கும் மின்னணு சேவைகளை கொண்டு சேர்ப்பது, நில ஆவண நிர்வாகம் மற்றும் இதர அரசு சேவைகள், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனை வசதி உள்ளிட்ட பிரிவுகளில், அதிக கவனம் செலுத்தும்.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில், எந்த வகையில் நிதி தொழில்நுட்ப சேவைகளை பரவலாக்குவது என்பது குறித்தும், இக்குழு ஆராயும்.
இந்நிறுவனங்கள் கடனுதவி பெறுவதற்கான, ‘மொபைல் ஆப்’கள் உருவாக்குவது ஊக்குவிக்கப்படும்; இதற்காக, ஜி.எஸ்.டி.என்., உடனான தகவல் தொகுப்பு, கடன் தகவல் நிறுவனங்களின் தகவல்கள் ஆகியவற்றை பொது வெளியில் பகிர்வது குறித்து பரிசீலிக்கப்படும்.நிதி தொழில்நுட்ப சேவை துறைக்கு என, தனி நிறுவன அடையாள எண் வழங்குவது குறித்து, தேசிய தனிநபர் அடையாள ஆணையம் போன்ற அரசு அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்கள்?
நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், பாரம்பரிய நிதிச் சேவையில் இருந்து மாறுபட்ட, மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளை கொண்டவை. உதாரணமாக, மொபைல் போனில், வங்கிச் சேவைகள், ‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பை வசதி, காப்பீட்டு வசதி போன்றவற்றை வழங்கும், ‘பேடிஎம், இட்ஸ்கேஷ், மொபிக்விக், பேங்க் பஜார், பாலிசி பஜார்’ போன்ற நிறுவனங்களை கூறலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|