பதிவு செய்த நாள்
10 மார்2018
00:39
புதுடில்லி:மத்திய அரசு, ‘இ – வே’ பில் எனப்படும் மின் வழிச் சீட்டு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. இதனால், மாநிலத்திற்குள்ளும், வெளியிலும் மிக சுலபமாக சரக்குகளை அனுப்பலாம்.
கடந்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வந்த, மின் வழிச் சீட்டு நடைமுறை, தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, துவக்க நாளன்றே திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, ஏப்., 1 முதல், மீண்டும் மின்வழிச் சீட்டு அமலுக்கு வருகிறது.
மின் வழிச்சீட்டு
இதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சரக்குகளின் போக்கு வரத்திற்கு, மின் வழிச் சீட்டு கட்டாயம் ஆகும்.இந்நிலையில், மின்வழிச் சீட்டு விதிமுறைகளை, மத்திய அரசு தளர்த்தியுள்ளது.அதன்படி, வரி விலக்கு பொருட்களுடன், வரி விதிப்பு சரக்கையும் கொண்டு செல்லும் போது, விற்பனை விலைப் பட்டியலில், அவை இடம் பெற்றிருந்தாலும், வரி செலுத்தப்படும் சரக்கின் மதிப்பிற்கு மட்டுமே, மின் வழிச் சீட்டு உருவாக்கினால் போதுமானது.
விலக்கு
இதனால், நுகர்ப்பொருள் நிறுவனங்கள் பெரிதும் பயனடையும்.அடுத்து, சிறிய வியாபாரிகள் சுலபமாக தொழில் செய்ய வசதியாக, ஒரு மாநிலத்திற்குள், 50 கி.மீ., வரை நடைபெறும் சரக்கு போக்குவரத்துக்கு, வாகன விபரங்கள் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு, முன்னர், 10 கி.மீ.,ஆக இருந்தது.சரக்கு போக்குவரத்திற்கான கால வரம்பையும், மத்திய அரசு தளர்த்தியுள்ளது. தற்போது, ஒரு நிறுவனம், சரக்கு போக்குவரத்திற்கான மின் வழிச் சீட்டை உருவாக்கினால், அது, 24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.
அதாவது, காலை 10 மணிக்கு தயாரிக்கப்படும் மின்வழிச் சீட்டு, மறுநாள் காலை, 10:௦௦ மணிக்கு பின், காலாவதியாகிவிடும். புதிய மின் வழிச் சீட்டை உருவாக்க வேண்டும்.செல்லுபடியாகும் இந்த கால வரம்பை, நள்ளிரவு, 12:௦௦ மணி என, அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி, காலை, 10 மணிக்கு சரக்கு போக்குவரத்துக்காக தயாரிக்கப்படும் மின் வழிச் சீட்டு, மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை செல்லுபடியாகும்.
இதனால், நிறுவனங்களுக்கு சரக்கு போக்குவரத்தில், கூடுதல் நேரமும், அவகாசமும் கிடைக்கும்.மாநிலங்கள் இடையிலான சரக்கு போக்குவரத்தில், தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே மின் வழிச் சீட்டை தயாரிக்கலாம் என்ற விதிமுறையும் தளர்த்தப்பட்டுள்ளது. இனி, நிறுவனங்கள் வழங்கும் கச்சா பொருட்களை, ஒப்பந்த அடிப்படையில், முழுமையான பொருட்களாக வடிவமைத்து தரும் தனி நபர் அல்லது சிறு நிறுவனங்களும், மின் வழிச் சீட்டை உருவாக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, பணிகளை வெளியாரிடம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளும் தொழிலில் நிலவி வந்த, மின் வழிச் சீட்டு தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், சிறிய வியாபாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் பயன் அடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|