பதிவு செய்த நாள்
11 மார்2018
00:20
புதுடில்லி:ஏப்., 1 முதல், சரக்கு போக்குவரத்துக்கான, ‘இ – வே’ பில், மீண்டும் அறிமுகமாகிறது. அத்துடன், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கான கெடுவும், ஏற்றுமதியாளர்களுக்கான வரிவிலக்கு சலுகை காலமும் நீட்டிக்கப்பட்டு உள்ளன.
மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், 26வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அருண் ஜெட்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், புதிய வரி விதிப்பின் செயல்பாடுகள், இடர்ப்பாடுகளுக்கான தீர்வுகள், அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
காலக்கெடு நீட்டிப்பு
அப்போது, சரக்கு போக்குவரத்தில், ‘இ – வே’ பில் நடைமுறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, ஏப்., 1 முதல், மீண்டும், ‘இ – வே’ திட்டத்தை அறிமுகப்படுத்துவது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, மாநிலங்கள் இடையிலான சரக்கு போக்குவரத்தில், இத்திட்டம் அமலாகும். அதன்பின், ஏப்., 15ல், மாநிலத்திற்குள் நடைபெறும் சரக்கு போக்குவரத்துக்கு விரிவுபடுத்தப்படும். ஜூன், 1க்குள், நாடு முழுவதும், ‘இ – வே’பில் முழுமையான செயல்பாட்டிற்கு வந்து விடும்.
நடப்பு, 2017 -– 18ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக் கெடு, மார்ச், 31லிருந்து, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜூன் வரை தாக்கல்இதன் மூலம் நிறுவனங்கள், அவற்றின் விற்பனை விபரங்களை, ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி படிவத்தில், ஜூன் வரை தாக்கல் செய்யலாம்.அதுபோல, ஏற்றுமதியாளர்களுக்கான வரிவிலக்கு சலுகை, மேலும் ஆறு மாதங்களுக்கு, அதாவது, செப்., வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்கள் பயன் பெறுவர்.
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் நடைமுறையை, மேலும் சுலபமாக்குவது குறித்து, கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.எனினும், மிகச் சுலபமாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் வசதியுடன், வரி ஏய்ப்பை தடுக்கும் அம்சங்களையும் இணைத்து, ஒற்றை படிவ நடைமுறையை கொண்டு வர, அரசு விரும்புகிறது.ஒரே படிவத்தில், சுலபமாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை உருவாக்கும் பொறுப்பு, சுஷில் குமார் மோடி தலைமையிலான, ஜி.எஸ்.டி., செயலாக்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வரி வசூல்
பல்வேறு வரிகளை நீக்கி, நாடு முழுவதும், ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்ட, ஜி.எஸ்.டி., 2017 ஜூலை, 1ல் அறிமுகமானது. அம்மாதம், ஜி.எஸ்.டி., மூலம், 93,590 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இது, ஆகஸ்டில், 93,029 கோடி ரூபாய்; செப்டம்பரில், 95,132 கோடி ரூபாயாக இருந்தது. அக்., – நவ., – டிசம்பர், முறையே, 85,931 கோடி ரூபாய், 83,716 கோடி ரூபாய், 88,929 கோடி ரூபாய் வசூலானது.இந்தாண்டு ஜனவரியில், ஜி.எஸ்.டி., மூலம், 88,047 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|