பதிவு செய்த நாள்
15 மார்2018
00:30
புதுடில்லி:‘இந்திய ரியல் எஸ்டேட் துறையின் சந்தை மதிப்பு, அடுத்த இரு ஆண்டுகளில், 18 ஆயிரம் கோடி டாலராக, அதாவது, 11,700 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயரும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறை குறித்து, ‘கிரெடாய்’ மற்றும், ஜே.எல்.எல்., நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்திய ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், ஜி.எஸ்.டி., அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்வு போன்ற, மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் துணை புரிகின்றன.
கடந்த, 2014 முதல், இந்திய வீட்டுவசதி துறையில், 59 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது. இதில், ரியல் எஸ்டேட் துறையின் பங்கு, 47 சதவீதமாக உள்ளது.ரியல் எஸ்டேட் சந்தை, 2015 நிலவரப்படி, 12,600 கோடி டாலராக இருந்தது. இது, 2020ல், 18 ஆயிரம் கோடி டாலராக உயரும்.இதே காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வீட்டுவசதி துறையின் பங்கு, இரு மடங்கு உயர்ந்து, 11 சதவீதமாக அதிகரிக்கும்.
நாட்டின் வளர்ச்சி காரணமாக, நகர்மயமாக்கல் அதிகரித்து வருகிறது. குடும்பங்களின் வருவாயும் உயர்ந்துள்ளது. இதனால், குறைந்த விலை வீடுகளுக்கான தேவை பெருகி உள்ளது.ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்கள், இந்திய ரியல் எஸ்டேட் துறையை ஒருங்கிணைக்க உதவும்; நேர்மையற்ற கட்டுமான நிறுவனங்களை களையெடுக்கும்.
இந்த ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான நிறுவனங்கள் மீது, நுகர்வோருக்கு நம்பிக்கை ஏற்படும். ஜி.எஸ்.டி., காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில், 3 – - 4 சதவீத செலவு குறையும்.டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட, எட்டு முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, நாக்பூர், கொச்சி, சண்டிகர், பாட்னா உள்ளிட்ட நகரங்களும், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மையங்களாக உருவெடுக்கும்.
இத்துறையின் வளர்ச்சிக்கு, தளர்த்தப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளும் துணை புரியும். ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடுகள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன.இத்துறையில், 2017ல், தனியாரின் பங்கு மற்றும் கடன் பத்திர முதலீடு, 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. குறைந்த விலை வீடுகள் மற்றும் கிடங்குகள் பிரிவிலும், முதலீடுகள் குவிகின்றன.
குறைந்த விலை வீடுகளுக்கு, அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது, கட்டுமான துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றத்திற்கான நேரம்
சமீபத்திய முன்னேற்றங்கள் மூலம், ரியல் எஸ்டேட் துறையில், மாற்றத்திற்கான நேரம் வந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், ஜி.எஸ்.டி., ஆகியவை, ரியல் எஸ்டேட் துறைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளன. இத்துடன், இந்தியாவின் பலமான பொருளாதார முன்னேற்றம், ரியல் எஸ்டேட் துறை வளர்சிக்கு சாதகமாக உள்ளது.
ரமேஷ் நாயர்
தலைமை செயல் அதிகாரி, ஜே.எல்.எல்.,
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|