பதிவு செய்த நாள்
16 மார்2018
00:57
சமீபகாலமாக, மக்கள், ஆரோக்கியமான, பழமையான உணவு பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். ‘ஆர்கானிக்’ காய்கறிகள், செக்கு எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி, ஏராளமான கடைகள் முளைத்துள்ளன.
சென்னையில் செக்கு எண்ணெய் விற்பனை கடைகள், திடீரென அதிகரித்துள்ளன. அதே போல் ஆர்கானிக் என்ற பெயரில், மளிகை கடை, காய்கறி கடைகளும் அதிகரித்துள்ளன.இதுவரை கிராமங்களில் மட்டுமே காணப்பட்ட மரச்செக்கு, சமீப காலமாக, சென்னை நகரில் ஏரியாவுக்கு ஒன்று என முளைத்து வருகிறது.
இதில், எண்ணெயை மட்டுமே வாங்கி வந்து, அதை, செக்கில் ஆட்டிய எண்ணெய் என, விற்பனை செய்யும் கடைகளும், ஆங்காங்கே முளைத்துள்ளன.
இது குறித்து, வியாசர்பாடியைச் சேர்ந்த, மரச் செக்கு எண்ணெய் வியாபாரி, தேவி பாண்டுரங்கன் கூறியதாவது:செக்கு எண்ணெய்க்கு தற்போது மவுசு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஆங்காங்கே, செக்குஎண்ணெய் கடைகள் முளைத்து வருகின்றன.மரச் செக்கு என்றால், கடையும் செக்கும், உரலும் மரத்தால் இருக்க வேண்டும். வாகை மரம் என்றால் இன்னும் சிறப்பு.
அரவை நேரமும் அதிகமாக இருக்க வேண்டும். இதனால், 20 சதவீத எண்ணெய் குறைவாகவே கிடைத்தாலும், கொழுப்பு அற்ற, உடலுக்கு ஆரோக்கியமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கில் ஆட்டும் எண்ணெயால், உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. மேலும், கடலையில் கல் இல்லாத, கெட்டுப்போகாத கடலையை உபயோகிப்பது நல்லது. இல்லாவிட்டால், மொத்த எண்ணெயும் கெட்டுப்போக வாய்ப்புண்டு.
தற்போது, சுத்தமான நாட்டு மரச் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், ஒரு கிலோ, 230 ரூபாய்க்கு கிடைக்கிறது. தேங்காய் எண்ணெய், 320 ரூபாய்க்கும், நல்லெண்ணெய், 290 ரூபாய்க்கும் கிடைக்கிறது.எண்ணெய்க்கான எள் ஒரு கிலோ, 110 ரூபாய்க்கும், கடலை, 70 ரூபாய்க்கும், தேங்காய், 140 – 170 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
சான்றிதழ்
பொதுவாக, மரச் செக்கில் எண்ணெய் ஆட்டும் போது, 15 கிலோ கடலையை அரைக்க, ஒன்றரை மணி நேரமாகும். 5.5 – 6 கிலோ எண்ணெய் கிடைக்கும். அதுவே, இரும்புச் செக்கில் ஆட்டினால், அரை மணி நேரத்தில் ஆட்டி விடுவர். எண்ணெயும், 2 கிலோ கூடுதலாக கிடைக்கும். உண்மையாக மரச் செக்கில் எண்ணெய் ஆட்டுபவர்கள், செக்கை பரிசோதிக்க அனுமதிப்பர்.தற்போது செக்கு எண்ணெய் விற்பனை நிலையங்களில், உணவு பாதுகாப்புத் துறையின் சான்றிதழ் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய சான்றிதழ்களை பார்த்து, வாடிக்கையாளர்கள் உண்மையை கண்டறியலாம்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|