பதிவு செய்த நாள்
17 மார்2018
00:09
மும்பை : சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள், நேற்று வீழ்ச்சி கண்டன.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 509 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 33 ஆயிரத்து, 176 புள்ளிகளில் நிலை கொண்டது.தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 165 புள்ளிகள் இறக்கம் கண்டு, 10 ஆயிரத்து, 195 புள்ளிகளில் நிலை பெற்றது.
வர்த்தகப் போர்:
இந்த சரிவு குறித்து, பங்குச் சந்தை வல்லுனர்கள் கூறியதாவது: இந்தியா மட்டுமின்றி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் நேற்று சரிவை கண்டன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் சூழல்.
அந்நாட்டு மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்ப்பு; இறக்குமதி வரியை உயர்த்தியதால், சர்வதேச வர்த்தகப் போர் மூளும் என்ற அச்சம் ஆகியவை, ஐரோப்பிய, ஆசிய பங்குச் சந்தைகளின் சரிவிற்கு காரணங்கள் எனலாம்.
இத்துடன், இந்தியா, ஏற்றுமதி மானியத்தை குறைக்க வேண்டும் என, அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பில் அளித்துள்ள புகார்; சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல் போன்றவையும், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிய வழி வகுத்தன.
எனினும், இந்திய பங்குச் சந்தைகள் சரிவிற்கு மேலும் பல காரணங்களை கூறலாம். குறிப்பாக, பா.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகி உள்ளதும்; எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, காங்., துவக்கியுள்ள முயற்சிகளும்; மத்திய அரசு மீது, ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்துள்ளதும், தேசிய அரசியலை பரபரப்பாக்கியுள்ளது.
பங்கு விற்பனை:
இதனால், இந்த ஆண்டே பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துஉள்ளது.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாய வரி, ஏப்., 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இதில், பிப்., 1 முதல் மார்ச் 31 வரை நடைபெறும் பங்கு பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பங்குகள் மூலம் லாபம் ஈட்டிய முதலீட்டாளர்கள், மூலதன ஆதாய வரியை தவிர்க்கும் பொருட்டு, பங்குகளை விற்பனை செய்தனர்.
பங்கு ஈட்டு மதிப்பின் அடிப்படையில், சந்தையின் பங்கு மூலதன விகிதாசாரம், அளவிற்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இதுவும் பங்கு விற்பனை அதிகரிக்க துணை புரிந்து, பங்குச் சந்தையின் இறக்கத்திற்கு வழி வகுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்றம் – இறக்கம்:
நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களில், 1,763 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவடைந்தன. எனினும், 917 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வுடன் கைமாறின. 168 பங்குகளின் விலை, எவ்விதமான ஏற்றமோ, இறக்கமோ இன்றி நிலையாக இருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|