பதிவு செய்த நாள்
17 மார்2018
14:05
கோவை: ''இந்திய ஜவுளித்துறையில், 2016ம் ஆண்டுக்குப் பின், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது,'' என, மத்திய ஜவுளித்துறை கமிஷனர், கவிதா குப்தா கூறினார்.எஸ்.ஆர்.டி.இ.பி.சி., எனப்படும், செயற்கை மற்றும் ரேயான் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகத்தை, கோவை, 'சைமா' அலுவலகத்தில், கவிதா குப்தா, நேற்று திறந்து வைத்தார்.
பருத்தி பயன்பாடு : பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலக அளவில், பருத்தி, பயன்பாடு 30 சதவீதமும், சிந்தடிக் பயன்பாடு, 70 சதவீதமும் உள்ளது. ஆனால், இந்தியாவில் இது தலைகீழாக உள்ளது. இந்தியாவில், பருத்தி பயன்பாடு, 70 சதவீதமும், சிந்தடிக் பயன்பாடு, 30 சதவீதமுமாக உள்ளது. இதை சமன்படுத்த, பருத்தி, செயற்கை மற்றும் ரேயான் இழை தொழில்கள் கைகோர்த்து வளர வேண்டும். ஜவுளி ஏற்றுமதி சலுகை, நிலுவைத்தொகைக்காக, மேலும், 900 கோடி ரூபாயை, மத்திய அரசு, விரைவில் ஒதுக்க உள்ளது. வருங்கால வைப்பு நிதியில், ஜவுளித்துறையினர் ஒரு கோடி ரூபாய் பங்களிப்பு செய்தால், அரசு, 55 லட்சம் ரூபாய் வழங்கு கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கண்காட்சி : சமீபத்தில், ஜவுளித்துறையின் ஒருங்கிணைந்த மாபெரும் கண்காட்சி, பெங்களூரில் நடந்தது. கோவையில் தென்மாநில அளவில் ஒரு கண்காட்சி நடத்த, ஜவுளித்துறை தயாராக இருக்கிறது. கடந்த, 2016ம் ஆண்டுக்கு பின், ஜவுளித்துறையில் நேரடியாக ஒரு லட்சம் பேர், மறைமுகமாக ஆறு லட்சம் பேர் என, மொத்தம் ஏழு லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிஉள்ளன. முப்பது ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகளும் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு கவிதா குப்தா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|