பதிவு செய்த நாள்
26 மார்2018
04:02
கடனுக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் பூர்த்தியாகி கடன் தொகை உரிய கணக்கிற்கு மாற்றப்பட்டதுமே, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் வாங்கிய கடனை எப்படி கையாள்கிறோம் என்பது முக்கியம். அதாவது கடனை எப்படி அடைக்கிறோம் என்பது நிதி எதிர்காலத்தின் மீது தாக்கம் செலுத்தும். கடன் பெற்றதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை:
தவறாத தவணை: வாங்கிய கடனை அடைக்க மாதந்தோறும் அதற்கான தவணை தொகையை செலுத்த வேண்டும். இ.எம்.ஐ., எனப்படும் இந்த தொகை கையை கடிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதோடு மாதத்தவணையை தவறாமல் செலுத்துவதிலும் கவனம் தேவை. ஏனெனில் மாதத்தவணை செலுத்த தவறுவது அல்லது தாமதம் ஆவது ஒருவரது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். தொடர்ந்து தவணையை செலுத்த தவறினால், ‘பிளாக் லிஸ்ட்’ செய்யப்படலாம்.
வட்டியை குறைப்பது: கடனுக்கு செலுத்தும் தவணையில் கணிசமான பகுதி வட்டியாகவே அமையும். அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் வட்டியில் கணிசமாக சேமிக்க முடியும். எனவே வாய்ப்புள்ள போது ஒரு தொகையை செலுத்த முயற்சிக்க வேண்டும். போனஸ் போன்ற தொகையை இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நீண்ட கால முதலீடு மற்றும் அவசர கால நிதியை இதற்காக பயன்படுத்தக்கூடாது.
கூடுதல் கடன்: பெரிய அளவில் கடன் வாங்கியிருக்கும் போது அதனுடன் வேறு கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதனால் நிதிச்சுமை அதிகரித்து, மாதத்தவணையை சமாளிப்பதில் சிக்கல் ஏற்படலாம். ஒரு கடனை முழுமையாக அடைத்த பின்னரே அடுத்த கடன் பெறுவது நல்லது. மேலும் குறுகிய காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை பெற்றிருப்பது ஒருவரது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.
மாற்று வாய்ப்பு: வீட்டுக்கடன் பெறுவதற்கு முன், பல வங்கிகளில் ஏறி இறங்கி, கடனுக்கான அம்சங்களை ஒப்பிட்டு பார்த்து, சிறந்த வாய்ப்பை தேர்வு செய்வது அவசியம். அதே போல கடன் பெற்ற பின்னரும், வட்டி விகித போக்கை கவனிக்க வேண்டும். வேறு ஒரு வங்கியில் குறைவான வட்டி விகிதம் அல்லது வேறு சாதகமான அம்சங்கள் இருந்தால் அவற்றை பரிசீலித்து எஞ்சியுள்ள கடன் தொகையை அந்த வங்கிக்கு மாற்றிக்கொள்வது பற்றி தீர்மானிக்கலாம்.
காப்பீடு: கடன் பெறும் போது காப்பீடு பாதுகாப்பு இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வீட்டுக்கடன் அல்லது வாகனக்கடன் போன்ற பெரிய அளவிலான கடன்கள் பெறும் போது அதற்கான காப்பீடு பெறுவது அவசியம். எதிர்பாராமல் அசம்பாவிதம் ஏற்பட்டால், குடும்பத்தை கடன் சுமையில் இருந்து இது காப்பாற்றும். இது மிகவும் அவசியமாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|