பதிவு செய்த நாள்
26 மார்2018
04:07
நிதி இலக்குகள் மற்றும் திட்டமிடலை ஆய்வு செய்ய, நிதியாண்டின் துவக்கம் சரியான வாய்ப்பாக கருதப்படுகிறது.
பொதுவாக முதலீட்டாளர்கள் அவ்வப்போது தங்கள் முதலீடுகளை பரிசீலனை செய்து, அவை நிதி இலக்கிற்கு ஏற்றவையாக இருக்கின்றனவா என, பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் புதிய நிதியாண்டு பிறக்கும் நிலையில், ஒருவர் தன் நிதி இலக்குகளை ஆய்வு செய்து, முதலீட்டு உத்திகளையும் சீர் துாக்கி பார்ப்பது சிறந்தது என நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர். தற்போதைய சூழலுக்கு ஏற்ற தேவையான மாற்றங்கள் செய்ய இது உதவும்.
பங்குச்சந்தை ஏற்ற இறக்கமான போக்கை சந்தித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் பங்குச்சந்தை ஒரிரு முறை பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளன. மேலும், வட்டி விகித போக்கிலும் மாற்றம் ஏற்படத் துவங்கியுள்ளது. இந்த பின்னணியில் முதலீட்டாளர்கள் தங்கள் நிதி திட்டமிடலை பரிசீலனைக்கு உள்ளாக்குவது அவசியமாகிறது.
புதிய இலக்குகள்:
இந்த பரிசீலனையை, நிதி திட்டமிடலில் இருந்து துவக்குவது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே விரிவான திட்டமிடல் இருந்து, அதற்கேற்ப பட்ஜெட் போட்டு செயல்படுத்தி வந்தாலும் கூட, புதிய இலக்குகளுக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டிய நிலை வரலாம். அதோடு, பழைய இலக்குகளில் சில நிறைவேறியிருக்கலாம்.
எனில் அவற்றுக்கு ஒதுக்கிய நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம். அதே போல, புதிதாக வாங்கிய கடன்களுக்கான மாதத்தவணை நிதி சுமையை அதிகமாக்கியிருக்கலாம். எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகள் மற்றும் முதலீடுகளை பரிசீலனை செய்து மாற்றம் தேவையா என, தீர்மானிக்க வேண்டும். புதிய செலவுகள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
புதிய இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். சம்பளம் பெறும் ஊழியர்களை பொறுத்தவரை, போனஸ் அல்லது ஊதிய உயர்வு போன்றவை வரும் வாய்ப்பு உள்ளதால், கூடுதலாக வரும் தொகையில் கணிசமான பகுதியை சேமிப்பு, முதலீட்டிற்கு ஒதுக்க வேண்டும். எஸ்.ஐ.பி., முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் அதை அதிகமாக்கலாம். வீட்டுக்கடன் பெற்றிருப்பவர்கள் மாதத்தவணையை அதிகமாக்கலாம். போனஸ் தொகை கையில் கிடைத்தால் அசலில் ஒரு பகுதியை அடைத்து வட்டி சுமையை குறைக்கலாம்.
சமபங்குகள்:
பங்குச்சந்தை போக்கில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பங்குச்சந்தை உச்சத்தை தொட்டு, அதற்கேற்ப சமபங்கு மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களில் பலரும் சமபங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கலாம். ஆனால் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவும் சூழலில், சமபங்கு முதலீடுகளை குறைப்பது அவசியம் என,வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இன்னமும் கூட பல பங்குகளின் மதிப்பு அதிகமாகவே இருப்பதாக கருதப்படும் சூழலில், முதலீட்டை விற்று லாபம் பார்ப்பது ஏற்றதா, என்றும் தீர்மானிக்கலாம். டெப்ட் பண்ட்களை பொறுத்தவரை கார்ப்பரேட் பாண்ட் பண்ட்கள் ஏற்றதாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.திட்டமிடல் போலவே, நிதி முதலீடுகளுக்கான நாமினேஷன் வசதிகளையும் கவனிக்க வேண்டும். பெரும்பாலானோர் நாமினேஷன் அம்சங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை என, வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே, நிதி திட்டங்களுக்கான நாமினேஷன் வசதி செய்யப்பட்டுள்ளனவா என பரிசீலித்து பார்ப்பது அவசியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|