பதிவு செய்த நாள்
27 மார்2018
04:08
புதுடில்லி : “மத்திய அரசுக்கும், என் தலைமையிலான வங்கிகள் வாரியத்திற்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை,” என, வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், ‘பொதுத் துறை வங்கிகளின் சீர்திருத்தம் தொடர்பாக, வங்கிகள் வாரியம் அளித்த பரிந்துரைகளை, நிதியமைச்சகம் மதிக்கவில்லை’ என, வினோத் ராய் கூறியதாக, செய்தி வெளியானது. அதனால், மத்திய அரசுக்கும், வங்கிகள் வாரியத்திற்கும் பனிப்போர் மூண்டுள்ளதாக, கருதப்பட்டது.
வழிகாட்டுதல்:
இந்நிலையில், வினோத் ராய், செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய அரசுக்கும், வங்கிகள் வாரியத்திற்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. இன்னும் சொல்வதானால், மத்திய அரசு, வங்கிகள் வாரியத்திற்கு முழுமையான ஆதரவை நல்கியுள்ளது. நான் அவ்வப்போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, அவரது வழிகாட்டுதலை பெற்று வந்துஉள்ளேன்.
வங்கித்துறை தொடர்பாக, பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் நான் பங்கேற்றுள்ளேன். மத்திய அரசு, எந்த வகையிலும், வங்கி தலைமை அதிகாரிகள் நியமனத்தில் தலையிட்டதில்லை. அவர்களை தேர்வு செய்ய, எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. வங்கிகள் வாரியம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த காலத்தில், ரிசர்வ் வங்கியின் ஆதரவும், அரசு துறை செயலர்களின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக, வாரியத்திற்கு கிடைத்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த இரண்டு பெரிய வங்கிகளின் தலைவர்கள் நியமனத்தில் கூட, நிதியமைச்சர் முழு நம்பிக்கையுடன் எனக்கு தேர்வு செய்யும் பொறுப்பை அளித்தார். அதில் எவ்விதத்திலும், அரசியல் தலையீடும் நிகழவில்லை.
ஆவணங்கள்:
வங்கிகள் வாரியத்தின் பணி, வரும், 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக, வாரியம் மேற்கொண்ட பணிகள், வங்கித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, தொகுக்கப்பட்டுள்ளது. அவை, புதிய வங்கி வாரியம் அமைக்கப்படும்பட்சத்தில், வங்கித் துறையை மேம்படுத்த உதவும், அடிப்படை ஆவணங்களாக விளங்கும். இந்த பரிந்துரைகள், வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நான், 10 நாட்களாக, சிங்கப்பூரில் இருந்ததால், முழுமையான ஆவணங்களை பார்க்க முடியவில்லை.
வலைதளத்தில், வங்கிகள் வாரியத்தின் முழு செயல்பாடுகளின் தொகுப்பு வெளியிடப்பட்ட போது, 2017, ஜூலையில், நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பான சில தலைப்புகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. அதனால், எனக்கும் மத்திய நிதியமைச்சகத்திற்கும் மோதல் என, தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதம் எழுதப்பட்ட பிறகும், நான் பல முறை நிதியமைச்சர் மற்றும் நிதிச் சேவைகள் செயலரை சந்தித்து, கருத்துக்களை தெரிவித்திருக்கிறேன். பொதுத் துறை வங்கிகளை சீரமைக்க, பி.ஜே.நாயக் குழு அளித்த பரிந்துரைப்படி, வங்கிகள் வாரியம் அமைக்கப்பட்டது. இது, பொதுத் துறை வங்கிளை புனரமைப்பதற்கான புரட்சிகரமான நடவடிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|