பதிவு செய்த நாள்
28 மார்2018
00:48
‘ஆன்லைன்’ வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழக நகை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக, தங்கம், வெள்ளி நகை தொழிலாளர் சங்கத்தினர் கூறுகின்றனர்.
ஆன்லைன் வர்த்தகம், வடமாநிலத்தவர்களின் வருகை போன்றவற்றால் தங்கம், வெள்ளி தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பூங்காநகர் தங்கம், வெள்ளி நகை தொழிலாளர் சங்கத் தலைவர் டி.ஜெயகோபி கூறியதாவது: சென்னையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தங்கம், வெள்ளி நகை தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
தங்கம், வெள்ளி விலையில் சீரான போக்கு இல்லாததாலும், மக்களிடையே பணப்புழக்கம் போதிய அளவு இல்லாததாலும், எங்களைப் போன்ற நகை தொழிலாளர்களுக்கு, மாதத்தில், 15 நாள் மட்டுமே வேலை கிடைக்கிறது. அதுவும் திருமண சீசன் என்றால் மட்டுமே வேலை இருக்கிறது. மேலும், ஜி.எஸ்.டி., அறிமுகத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால், பல தொழிலாளர்களுக்கு போதிய வேலை கிடைக்கவில்லை. இதனால் தொழிலை விட்டே அவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டடு உள்ளது.
சமீபகாலமாக இத்தொழிலை நம்பி வடமாநிலத்திலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நம் தொழிலாளர்களுக்கு, ஒரு நாளுக்கு, 700 ரூபாய் வரை சம்பளம் தர வேண்டும். ஆனால், வடமாநிலத்தவர்களுக்கு, 300 ரூபாய் கொடுத்தாலே போதும் என, வாங்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு தங்கும் இடத்துடன் சாப்பாடும் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவதால், வடமாநிலத்தவர்கள், அவர்களை சார்ந்தவர்களிடத்திலேயே வேலைக்கு சேர்ந்து விடுகின்றனர்.
வடமாநிலத்தவர்கள் பேஷன் நகைகளையே விரும்பி செய்வர். அவர்கள் செய்யும் நகை குறிப்பிட்ட நாளுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும். ஆனால் நம்மூர் தொழிலாளர்கள் செய்வது போல், உறுதியான, அழகிய வேலைப்பாடுடன் கூடிய நகைகளை அவர்கள் செய்வதில்லை. இப்போதைக்கு பேஷன் நகைகளுக்கு தான் மவுசு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக நகை தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|