பதிவு செய்த நாள்
28 மார்2018
00:51
புதுடில்லி : உணவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வகையை, சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஏற்ப, மாற்றி அமைக்கப்பட இருப்பதாக, உணவு மற்றும் பாதுகாப்பு தர ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் உணவு மற்றும் பாதுகாப்பு தர ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பவன் குமார் அகர்வால் கூறியதாவது:உணவுத் தொழில் நடத்துவதற்கு பெற வேண்டிய உரிமம் மற்றும் பதிவுகளை மாற்றி அமைத்து வருகிறோம். இதில், ஜி.எஸ்.டி., மற்றும் மிகச் சிறு, சிறு மற்றும் குறுந்தொழில்களின் வரைமுறைகளுக்கு ஏற்ப, பல்வேறு விதமாக உணவுத் தொழில்களை வகைப்படுத்த இருக்கிறோம்.
மின்னனு முறை:
இதன்படி, தற்போதுள்ள, 17 உணவுத் தொழில் வகைகள், 8 ஆகக் குறைக்கப்படும். உதாரணமாக, தற்போது ஆண்டு விற்றுமுதல், 12 லட்சம் ரூபாய் வரையுள்ள உணவுத் தொழில் பிரிவு, 20 லட்சம் ரூபாய் பிரிவுக்கு மாற்றியமைக்கப்படும். அதோடு, உணவுத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள், முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்க உள்ளோம். இதற்கு தேவையான மின்னணு முறையை, ஆணையம் உருவாக்கி வருகிறது. அடுத்த, 23 மாதங்களில் இந்த முறை பயன்பாட்டுக்கு தயாராகிவிடும்.
புதிய உணவுப் பொருட்கள் தயாரிப்புக்கு உரிமம் கோரும்போது, அந்தந்த நிறுவனங்களின் முந்தைய சிறப்பான செயல்பாடுகளைப் பார்த்து முடிவெடுப்பது, பயனுடையதாக இருக்கும். ஆனால், தற்போது அத்தகைய வசதி ஓரிடத்தில் சேர்ந்தாற்போல் இல்லை. மேலும், உரிமம் வழங்கும்போது, தர நிர்ணயம் மற்றும் மேலட்டையில் அதன் விபரங்களை முறையாக அச்சடிப்பட்டிருக்கின்றனவா என்பதையும் ஆணையம் சரிபார்க்கும். எதிர்காலத்தில் இந்த வரையறைகளும், உரிமம் பெறும் படிவத்தில் சேர்க்கப்படும்.
உணவகங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக ஒரு தரக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.அதன் அடிப்படையில், உணவகங்களை தரம் பிரிப்பதற்கு, தகுதியான தரப் பரிசோதனை அமைப்பை, விரைவில் நியமனம் செய்ய இருக்கிறோம்.உலகெங்கும், இதை நடைமுறைப்படுத்துவதற்கு என்றே, ஒழுங்குமுறை அதிகாரிகள் இருக்கின்றனர். எங்களிடம் இருக்கும் பணியாளர்கள் மிகவும் குறைவு. அதனால் தான், இதை வெளி நிறுவனங்களுக்கு வழங்கி விடலாம் என, முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.
பயிற்சி கட்டாயம்:
ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள உணவகங்களின் சுகாதார தரத்தை, அந்தந்த மாநிலங்களே தரவரிசை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படும். தரப்படுத்துதலில் ஓரளவுக்கு பயிற்சி கிடைத்தவுடன், இந்த நெறிமுறைகள் கட்டாயமாக்கப்படும். அதேபோல் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களுடைய தரத்தை தாங்களே நெறிமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில், ஆணையம் உறுதியாக இருக்கிறது.
அதற்காக, ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு உணவுப் பொருளையும் சோதனை செய்ய, திறன் பெற்ற உணவுப் பரிசோதகர் அல்லது அதிகாரியை நியமிப்பதற்கு பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை, 800 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, 18,000 பணியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அடுத்த ஓரிரு ஆண்டுகள் இத்தகைய பயிற்சி கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|