பதிவு செய்த நாள்
30 மார்2018
02:09
புதுடில்லி : சில ஆண்டுகளாக, வேளாண் துறை ஏற்றுமதி மந்தமாக உள்ள போதிலும், ‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மட்டும், ஓசையின்றி சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது.
ரசாயன உரங்கள், நச்சுத் தன்மையுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தாமல், இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படுபவை, ‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் எனப்படுகின்றன.
வளர்ச்சி:
உலகெங்கிலும், இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. கடந்த, 2015 – -16ம் நிதியாண்டு முதல், நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், தேக்க நிலை காணப்படுகிறது. இத்துறையின் ஏற்றுமதி, 2016- – 17ம் நிதியாண்டில், மதிப்பின் அடிப்படையில், 1 சதவீதம் மட்டும் உயர்ந்து, 107.43 கோடி டாலரில் இருந்து, 108.42 கோடி டாலராக இருந்தது. ஆனால், இயற்கை முறையில் உற்பத்தியாகும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, பல மடங்கு அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டுகளில், இப்பிரிவின் ஏற்றுமதி, 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.97 கோடி டாலரில் இருந்து, 2.47 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், இயற்கை விவசாய பொருட்களின் பங்கு, 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள போதிலும், அதன் ஏற்றுமதி, சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது.
விற்பனை:
கடந்த பத்தாண்டுகளில், இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 500 கோடி ரூபாயில் இருந்து, 2,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், சோயா, பருத்தி ஆகியவற்றின் பங்கு, 50 சதவீதமாகவும், மசாலா பொருட்கள், தேயிலை, பருப்பு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் எஞ்சிய பங்கையும் கொண்டுள்ளன.
இது குறித்து, கூர்கானைச் சேர்ந்த, ‘ஜஸ்ட் ஆர்கானிக்’ நிறுவனர் பங்கஜ் அகர்வால் கூறியதாவது: இந்தியாவில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா ஆகியவை முக்கிய சந்தைகளாக உள்ளன. ஆனால், இயற்கை உணவுப் பொருட்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புகளின் தரச் சான்றிதழ் பெறுவது தான், பிரச்னையாக உள்ளது.
சமீபத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், அதன் தரச் சான்று இல்லாத எந்த உணவுப் பொருட்களையும், இயற்கை வேளாண் பொருள் என்ற பிரிவின் கீழ் விற்பனை செய்யக் கூடாது என, உத்தரவிட்டுள்ளது. சிறிய விவசாயிகளுக்கு, இந்த விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் உத்தரவு, பிற்போக்கானது. இயற்கை வேளாண் பொருட்கள் துறையின் வளர்ச்சிக்கு, எளிய நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
முதன் முதலாக:
முதன் முதலாக, சிக்கிம் மாநிலம், 2016ல், 100 சதவீதம் இயற்கை விவசாயத்திற்கு மாறியது. இதையடுத்து, கேரளா, மிசோரம், கோவா, ராஜஸ்தான், மேகாலயா ஆகியவை, முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாற உள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|