பதிவு செய்த நாள்
07 ஏப்2018
01:00
புதுடில்லி:‘இந்திய தொலைதொடர்பு சேவையில், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் நுழைந்ததால், நுகர்வோருக்கு, ஆண்டுக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம் ஆகி உள்ளது’ என, ஐ.எப்.சி., நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹார்வர்டு வணிக கல்வி மையத்தைச் சேர்ந்த, ஐ.எஸ்.சி., அமைப்பின் ஓர் அங்க மாக, ஐ.எப்.சி., உள்ளது. கூர்கானைச் சேர்ந்த இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:
உயர்ந்தது
முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ நிறுவனம், வர்த்தக ரீதியிலான தொலைதொடர்பு சேவையை, 2016, செப்., 5ல் துவக்கியது. குறிப்பிட்ட காலத்திற்கு இலவச சேவையை வழங்கிய இந்நிறுவனம், அதன் பின், கட்டணச் சேவைக்கு மாறியது.எனினும், இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய, வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்பு; ‘டேட்டா’ எனப்படும் தரவு பரிவர்த்தனைக்கு மிகக் குறைவான கட்டணம் ஆகியவற்றால், குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை ஈர்த்தது.
அதுவரை, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், 1 ஜி.பி., தரவு பரிவர்த்தனைக்கு, சராசரியாக, 152 ரூபாய் வசூலித்து வந்தன. இது, ஆர்ஜியோ வருகைக்கு பின், 10 ரூபாயாக குறைந்தது.இதனால், மொபைல் போனில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.
தரவு பரிவர்த்தனை கட்டணம் குறைந்ததால், சமூகத்தின் பலதரப்பட்ட மக்களும், முதன் முறையாக மொபைல் போனில் இணைய வசதியை பயன்படுத்த துவங்கினர்.இந்த வகையில், ‘ஆர்ஜியோ’ வருகையால், மிகக் குறைவாக கணக்கிட்டால் கூட, நுகர்வோருக்கு, ஆண்டுக்கு, சராசரி, 1,000 கோடி டாலர், அதாவது, 65 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
பயன்
மொபைல் போனில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால், தொலைதொடர்பு துறை மட்டுமின்றி, இதர துறைகளுக்கும் பல்வேறு வகைகளில் பயன் கிட்டியுள்ளது.இது, தனிநபர் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்திவளர்ச்சியை, 5.65 சதவீதம் உயர்த்தும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ஒன்றரை ஆண்டுகளில், மொபைல் போனில், ‘ஆப்’களை பதிவிறக்கம் செய்வதில், சீனாவுக்கு அடுத்த இடத்தை, இந்தியா பிடித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிர்ப்பந்தம்
தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாயில், 75 சதவீதம், அழைப்புகள் மூலம் கிடைத்து வந்தது. இந்நிலையில், ‘வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்பு’ என, ஆர்ஜியோ அறிவித்ததால், தொலைதொடர்பு சேவை துறை, அடியோடு மாறியது. கடும் போட்டியால், இதர நிறுவனங்களும் கட்டணங்களை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
முதலிடம்
இந்தியாவில், மொபைல் போனில், இணையம் வாயிலான தரவு பரிவர்த்தனை, மாதம், 20 கோடி ஜி.பி., அளவிற்கு இருந்தது. இது, ஆர்ஜியோ சேவையை துவக்கிய பின், 100 கோடி ஜி.பி., ஆக உயர்ந்துள்ளது.இதனால், உலகிலேயே மொபைல் போனில் அதிகமாக தரவு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நாடுகளில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த, 2017 இறுதி நிலவரப்படி, ஒரு மாதத்தில், சராசரியாக, 10 ஜி.பி., தரவு பரிவர்த்தனை; 700 நிமிட அழைப்பு; 134 மணி நேர வீடியோவை ஆர்ஜியோ சந்தாதாரர்கள் பயன்படுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|