பதிவு செய்த நாள்
13 ஏப்2018
01:22
புதுடில்லி:இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், 10 கோடி ரூபாய்க்கு மேற்படாத முதலீட்டில் துவக்கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, வருமான வரி விலக்கு சலுகையை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன. இதற்கு, ‘பிளிப்கார்ட், அமேசான், ஓலா, ஸ்நாப்டீல்’ போன்ற எண்ணற்ற நிறுவனங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.
ஏராளமான இளைஞர்கள், மொபைல் போன், ‘ஆப்’களை உருவாக்கி, பலவிதமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்குகின்றனர்.இந்த நிறுவனங்களுக்கு உதவ, மத்திய அரசு, தனி நிதியம் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி மற்றும் மூலதன ஆதாய வரிகளில் விலக்கு உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
எனினும், வருமான வரி சட்டம், பிரிவு, 56ன் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரட்டும் முதலீடுகள் மீதான வருவாய்க்கு வரி விதிக்கப்படுகிறது.இதனால், முதலீடுகளை திரட்டுவது கடினமாக உள்ளதால், வரி விலக்கு அளிக்க வேண்டும் என, ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.இதை ஏற்று, வரி விதிப்பு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்திஉள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:‘ஏஞ்சல் பண்டு’களின் முதலீடு உட்பட, ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மொத்த முதலீடு, 10 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், வருமான வரி விலக்கு பெறலாம்.அத்தகைய முதலீடு மேற்கொள்ளும் ஏஞ்சல் பண்டுகள், குறைந்தபட்சம், 2 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பை கொண்டிருக்க வேண்டும் அல்லது முந்தைய மூன்று நிதியாண்டுகளில், சராசரியாக, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியிருக்க வேண்டும்.
தளர்த்தப்பட்ட இந்த விதிமுறைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சுலபமாக முதலீடுகளை திரட்ட துணை புரியும். அத்துடன் எளிதாக, புதிய தொழில்கள் துவங்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
யார் பயன் பெறலாம்?
கடந்த, 2016, ஏப்., 1 முதல் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வரி சலுகைகள் பெற தகுதியுடையவை என, அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் அனைத்தும், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதுவரை அங்கீகரிக்கப்பட்ட, 8,765 நிறுவனங்களில், 88 நிறுவனங்களுக்கு வரி சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
‘ஏஞ்சல் பண்டு’
ஒருவரின் சிந்தனையில் உருவாகும் ஸ்டார்ட் அப் தொழில், நிறுவனமாக உருப்பெற, துவக்கத்தில் நிதியுதவி செய்வோர், ‘ஏஞ்சல்’ முதலீட்டாளர்கள் ஆவர். ஓராண்டில், 300 – -400 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ‘ஏஞ்சல் பண்டு’ எனப்படும் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|