பதிவு செய்த நாள்
19 ஏப்2018
00:40
புதுடில்லி : மின்னணு ஆரோக்கிய பராமரிப்பு துறையைச் சேர்ந்த, 12 நிறுவனங்கள், மூன்று மாதங்களில், ‘வெஞ்சர் கேப்பிடல்’ எனப்படும் துணிகர முதலீட்டாளர்களிடம் இருந்து, 250 கோடி டாலர் முதலீடுகளை திரட்டி, சாதனை படைத்துள்ளன.
வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன. இவற்றின் வர்த்தகம், மின்னணு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. இதற்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் எடை, உடற்பயிற்சியில் ஏற்படும் மாற்றம் போன்ற தகவல்களை காட்டும், கையணிகலன்களை எடுத்துக் காட்டாக கூறலாம்.
இந்த வகையில், மின்னணு ஆரோக்கிய பராமரிப்பு துறையைச் சேர்ந்த, 12 நிறுவனங்கள், இந்தாண்டு, ஜன., – மார்ச் வரை, 250 கோடி டாலர் துணிகர முதலீடுகளை திரட்டி சாதனை புரிந்து உள்ளன. கடந்த ஆண்டு, இதே காலத்தில், இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் திரட்டிய முதலீடு, 160 கோடி டாலராக இருந்தது. இதற்கு முன், 2017ல், ஏப்., – ஜூன் காலாண்டில், அதிகபட்சமாக, 240 கோடி டாலர் திரட்டப்பட்டதே, சாதனையாக இருந்தது. இது, நடப்பாண்டின் முதல் காலாண்டில், முறியடிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், ‘ஹார்ட்ப்ளோ’ நிறுவனம், அதிகபட்சமாக, 24 கோடி டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது.இதையடுத்து, ‘ஹெலிக்ஸ், சோமா லாஜிக்’ ஆகிய நிறுவனங்கள், தலா, 20 கோடி டாலர் திரட்டிக் கொண்டன. ‘பாயின்ட் கிளிக் கேர்’ நிறுவனம், 14.60 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது. ‘கலெக்டிவ் ஹெல்த்’ நிறுவனம், 11 கோடி டாலர் திரட்டி உள்ளது. இந்தாண்டின் முதல் காலாண்டில், மின்னணு ஆரோக்கிய பராமரிப்பு துறை நிறுவனங்கள், அனைத்து வகை கடன்கள் மூலம், 300 கோடி டாலர் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|