பதிவு செய்த நாள்
19 ஏப்2018
00:41
புதுடில்லி : ‘‘ஏற்றுமதியாளர்களின், ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு, நிதிஅமைச்சகத்திடம் பேசி, விரைவில் தீர்வு காணப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்தியா, 2017, ஜூலை 1ல், புதிய வரி விதிப்பான, ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு மாறியது. அது முதல், இந்தாண்டு மார்ச் வரை, ஏற்றுமதியாளர்கள் செலுத்திய, ஜி.எஸ்.டி.,யில், 17 ஆயிரத்து, 616 கோடி ரூபாய் திரும்ப அளிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ஐ.ஜி.எஸ்.டி.,யில், 9,604 கோடி ரூபாய்; உள்ளீட்டு வரியில், 5,510 கோடி ரூபாய் ஆகியவை அடங்கும். இது தவிர, மாநில அரசுகளின் வரிக் கழிவுகள் ஆகியவற்றின் கீழ், 34 ஆயிரம் கோடி ரூபாய், ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், கணக்கு தாக்கலின்போது நேரும் தவறுகள், நடைமுறை சிக்கல்களால் ஏற்படும் தாமதம் போன்றவற்றால், 40 சதவீத அளவிற்கே ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்றுமதியாளர்கள், நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், டில்லியில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: ஜி.எஸ்.டி., ரீபண்ட், ஏற்றுமதியாளர்களுக்கு மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. அவர்களிடம், திரும்பப் பெற வேண்டிய வரித் தொகை விபரங்களை கேட்டுள்ளேன்.இப்பிரச்னையை நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் தீர்வு காண்பேன்.
நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அத்துடன், அனைத்து துறைகளிலும், எந்தெந்த வகையில் ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்பதை அறிக்கையாக வழங்குமாறும், ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளேன். அந்த பரிந்துரைகளின் அடிப்படையில், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், ஏற்றுமதியை மேம்படுத்த, வலிமையான திட்டம் தயாரிக்கப்படும்.
இது தொடர்பாக, விரைவில் அமைச்சரவை உயரதிகாரிகள் கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டுள்ளேன். கடந்த, 2016 – 17ம் நிதியாண்டை விட, 2017 – 18ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 9.78 சதவீதம் வளர்ச்சி கண்டு, 30 ஆயிரத்து, 284 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
வர்த்தகம் பாதிப்பு :
ஏற்றுமதியாளர்களுக்கு, ஜி.எஸ்.டி., செலுத்திய வகையில், திரும்ப வர வேண்டிய ரீபண்ட், ஐந்து மாதங்களுக்கு மேலாக வராமல் உள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்கள் கடும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடைமுறை மூலதன பற்றாக்குறை காரணமாக, அவர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, ரீபண்ட் வழங்கும் நடைமுறையை முழுவதுமாக, ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்ற வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு, 60 சதவீதத்திற்கு மேல், ரீபண்ட் நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|