பதிவு செய்த நாள்
27 ஏப்2018
00:57
புதுடில்லி : சரக்கு போக்குவரத்தில், ‘இ – வே’ பில் எனப்படும் மின்னணு வழிச் சீட்டு நடைமுறையை மேலும் எளிமையாக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நடப்பு ஏப்., 1ல், சரக்கு போக்குவரத்திற்கான, மின்னணு வழிச் சீட்டு நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பிலான சரக்கு போக்குவரத்திற்கு, மின்னணு வழிச் சீட்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து சேவை நிறுவனங்கள், ‘இ – வே’ பில் வலைதளத்தில், மின்னணு வழிச் சீட்டுகளை தயாரிக்கலாம்.
சரக்குகளை கொண்டு செல்லும்போது, வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தால், மின்னணு வழிச் சீட்டை காண்பிக்க வேண்டும். முதற்கட்டமாக, மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்தில் அமலான இந்த திட்டம், மாநிலங்களுக்குள் நடைபெறும் சரக்கு வினியோகத்திலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
மின்னணு வழிச் சீட்டு நடைமுறையால், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, சோதனைச் சாவடிகள் எதுவுமின்றி, சரக்குகளை விரைவாக எடுத்துச் செல்ல முடிகிறது. இதனால், சரக்கு போக்குவரத்து செலவு, நேரம் ஆகியவை மிச்சமாகியுள்ளன. எனினும், மாநிலம் விட்டு மாநிலம் வரும் போது, பல இடங்களில், சரக்குகளை, வரித் துறையினர் ஆய்வு செய்வதால், தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
இது குறித்து, கே.பி.எம்.ஜி., நிறுவனத்தின், வரி பிரிவு தலைவர், சச்சின் மேனன் கூறியதாவது: மின்னணு வழிச் சீட்டு நடைமுறை, சுமுகமாக போய்க் கொண்டிருக்கிறது. எனினும், சில நடைமுறைச் சிக்கல்களும், குழப்பங்களும் உள்ளன. ஒரு முறை, அதிகாரிகள் ஆய்வு செய்த பின், வேறிடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஆவணங்களை சரிபார்த்தால் போதுமா அல்லது சரக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டுமா என்பதில், தெளிவான வழிகாட்டுதல் இல்லை.
இது போன்ற பிரச்னைகள், மத்திய நிதியமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதையடுத்து, சரக்கு போக்குவரத்தில், ஒரு முறை மட்டும் ஆய்வு செய்யும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மே 4ல் கூடி, புதிய வரி விதிப்பு நடைமுறையை மேலும் சுலபமாக்குவது குறித்து விவாதிக்க உள்ளது.
இதையடுத்து, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல், மின்னணு வழிச் சீட்டு ஆகியவற்றுக்கு, மேலும் எளிமையான நடைமுறைகள் அறிவிக்கப்படும் என, தெரிகிறது. ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் பெறும் பயனை, நுகர்வோருக்கு அளிக்காமல், அதாவது விலை குறைப்பு செய்யாத நிறுவனங்கள் மீது, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
2 கோடியை தாண்டியது:
ஏப்., 1ல், ‘இ – வே’ பில் அமலுக்கு வந்தது. 24 நாட்களில், இரண்டு கோடிக்கும் அதிகமான ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏப்., 15ல், உள்ளுர் சரக்கு போக்குவரத்துக்கான, ‘இ – வே’ பில் நடைமுறை அறிமுகமானது. இது, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|