பதிவு செய்த நாள்
29 ஏப்2018
01:46
புதுடில்லி: மரபு சாரா எரிசக்தி துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சூரிய ஒளி, காற்று, மாசு குறைவான, உயிரி எரிபொருட்கள் போன்றவற்றின் மூலம், மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பசுமை நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன.
வர்த்தக வாய்ப்பு : மத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய மின் உற்பத்தி தொகுப்பில், 2022ல், 175 கிகா வாட், மரபு சாரா எரிசக்தி திறனை இணைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12 ஆயிரத்து, 500 கோடி டாலருக்கும் அதிகமாக, முதலீடு தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், மரபு சாரா எரிசக்தி துறை நிறுவனங்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இத்துறை நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியை, வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் பெறுகின்றன. அவை, எதிர்கால வர்த்தக வாய்ப்புகளை கருதி, மின் உற்பத்தி திட்டங்களை விரிவாக்கம் செய்ய விரும்புகின்றன.அதனால், பங்குகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்தும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன. அதற்கேற்ப, தற்போது, மரபு சாரா எரிசக்தி துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய, சர்வதேச நிதி முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், பசுமை எரிசக்தி துறையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், பங்கு வெளியீடு மேற்கொண்டு, பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற உள்ளன.பசுமை எரிசக்தி துறையில், கடைசியாக, 2010ல், ‘ஓரியண்ட் கிரீன் பவர்’ நிறுவனம், பங்கு வெளியீடு மேற்கொண்டது.அதன் பின், முதன் முறையாக, இரண்டு பசுமை எரிசக்தி நிறுவனங்கள் விரைவில் பங்கு வெளியீடு மேற்கொள்ள உள்ளன.
அதானி குழுமம் : அதில் முதலாவதாக, ‘அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் அங்கமான, ‘அதானி கிரீன் எனர்ஜி’ அடுத்த சில வாரங்களில், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, நிதி திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அதானி என்டர் பிரைசஸ் நிறுவனம், அதானி கிரீன் எனர்ஜியில் கொண்டுள்ள பங்கில், குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்யும் என, தெரிகிறது.இந்நிறுவனம், இந்தியா,ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளில், அதன் காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகரிக்க உள்ளது.
எதிர்பார்ப்பு : ஹரியானாவின் கூர்கானைச் சேர்ந்த, ‘ரிநியூ பவர் வெஞ்சர்ஸ்’ நிறுவனம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், காற்றாலை, சூரிய சக்தி மூலம், 100 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், விரைவில் பங்கு வெளியீடு மேற்கொண்டு, அதன் பங்குகளை, பங்குச் சந்தையில் பட்டியலிட உள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளுக்கு, முதலீட்டாளர்களிடையே ஆதரவு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதை தொடர்ந்து, மரபு சாரா எரிசக்தி துறையைச் சேர்ந்த மேலும் பல நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் களமிறங்கும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|