பதிவு செய்த நாள்
30 ஏப்2018
03:21
வைப்பு நிதி முதலீடு எளிதானது என்றாலும், சரியான வைப்பு நிதியை தேர்வு செய்ய பரிசீலிக்க வேண்டிய அடிப்படையான அம்சங்கள் இருக்கின்றன.
சராசரி இந்தியர்கள் பரவலாக நாடும் முதலீட்டு வாய்ப்பாக வைப்பு நிதி அமைகிறது. குறிப்பாக, நிலையான வருமானம் வேண்டுவோர், வங்கி வைப்பு நிதி முதலீட்டை அதிகம் நாடுகின்றனர். தற்போது, வட்டி விகிதம் உயரத் துவங்கியுள்ள சூழலில், வைப்பு நிதி மீதான கவனமும் அதிகரித்துள்ளது. வங்கிகளில் வைப்பு நிதி திட்டத்தை தேர்வு செய்யும் போது, சிறந்த பலனை பெற பரிசீலிக்க வேண்டிய அடிப்படையான அம்சங்களை நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு மூன்று முக்கிய அம்சங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
வட்டி விகிதம் : வைப்பு நிதி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது, அதன் வட்டி விகித பலன் தான். வைப்பு நிதி திட்டத்தை தேர்வு செய்யும் போது, முதலில் கவனிக்க வேண்டியது வட்டி விகிதம் மற்றும் அதற்கான கால அளவும் தான். வட்டி விகிதம், 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கு மாறுபடுவதோடு, கால அளவிற்கு ஏற்பவும் மாறுபடுகிறது. வங்கிகளுக்கு இடையேயும் வட்டி விகிதம் மாறுபடலாம். தற்போதைய சூழலில் வைப்பு நிதி வட்டி விகிதம் ஆண்டுக்கு, 3.15 சதவீதத்தில் இருந்து, 9 சதவீதம் வரை இருக்கிறது. ஏழு நாள் முதலீடு துவங்கி, 10 ஆண்டுகள் வரையிலான முதலீடு வரை இது அமைகிறது. பொதுவாக பார்க்கும் போது, மத்திய தர வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், பெரிய வங்கிகளை விட அதிக வட்டி விகிதம் அளிக்கும் சூழல் உள்ளன. வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்ப்பது அவசியம். ஒரு சில வங்கிகள், சேமிப்பு கணக்கில் இருந்து வைப்பு நிதிக்கு தானாக மாற்றிக்கொள்ளும், ‘ஸ்வீப் இன்’ வசதியையும் அளிக்கின்றன. வைப்பு நிதி தேர்வில் பலரும் மனதில் கொள்ளும் மற்றொரு அம்சம், வைப்பு நிதி துவக்கும் வசதியாகும். பெரும்பாலானோர் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கி கிளையிலேயே வைப்பு நிதி முதலீட்டையும் மேற்கொள்கின்றனர். பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு, ‘நெட் பேங்கிங்’ மூலம் முதலீடு செய்யும் வசதியையும் அளிக்கின்றன. ஸ்வீப் இன் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சில வங்கிகள், வாடிக்கையாளர்கள் அல்லாதோரும் ஆன்லைனில் வைப்பு நிதி துவக்க அனுமதி அளிக்கின்றன. வைப்பு நிதி துவக்க, சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, சேமிப்பு கணக்கு உள்ள வங்கியில் தான் வைப்பு நிதி முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியில் வைப்பு நிதி வட்டி விகிதம் குறைவாக இருந்தால், அதிக வட்டி தரும் வங்கியை நாடலாம்.
அபராதம் : வைப்பு நிதியை விரும்பிய போது விலக்கிக் கொள்ளலாம் என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன் முதலீட்டை விலக்கிக் கொண்டால் அபராதம் விதிக்கப்படலாம். வட்டி விகித பலனில், 1 சதவீதம் வரை இது அமையலாம். முதிர்வு காலத்திற்கு முன் முதலீட்டை விலக்கினால், வட்டி விகித பலன் குறையும். அபராத தொகை வங்கிக்கு வங்கி மாறுபடுவதால் இந்த அம்சத்தையும் மனதில் கொள்ள வேண்டும். பல வங்கிகள் ஏழு நாட்களுக்கும் குறைவான முதலீட்டிற்கு வட்டி அளிப்பதில்லை. பொதுவாக, உடனடியாக தேவைப்படாத தொகையை வைப்பு நிதியில் முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், முதிர்வுக்கு முன் விலக்கிக் கொள்ளும் சூழலை தவிர்க்கலாம்.
ஆன்லைனில் பி.பி.எப்., கணக்கு துவக்கும் வழி
பொது வருங்கால வைப்பு நிதி என குறிப்பிடப்படும், பி.பி.எப்., கணக்கு துவக்குவதை மேலும் எளிதாக்கும் வகையில், ஆன்லைனில் கணக்கு துவக்கும் வசதி அமைகிறது. பி.பி.எப்., சேமிப்பை பெற, அனுமதிக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில், பி.பி.எப்., கணக்கை துவக்கலாம். எனினும், ஆன்லைனில் கணக்கு துவக்கும் வசதி வங்கிகளில் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஒரு சில வங்கிகள், ஆன்லைன் மூலம் கணக்கு துவங்கும் வசதியை முழுமையாக அளிக்கின்றன. சில வங்கிகள், பகுதி அளவு இந்த வசதியை அளிக்கின்றன.பி.பி.எப்., கணக்கை ஆன்லைனில் துவக்க, உறுப்பினர் குறிப்பிட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும், ‘நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங்’ வசதியை செயல்படுத்தியிருக்க வேண்டும்; சேமிப்பு கணக்குடன், ‘ஆதார்’ எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.உறுப்பினர், வங்கியின் நெட் பேங்கிங் வசதியில் நுழைந்து, பி.பி.எப்., கணக்கு துவக்கும் வசதியை அணுக வேண்டும். பின், பி.பி.எப்., பணம் செலுத்துவதற்கான சேமிப்பு கணக்கை தேர்வு செய்ய வேண்டும். வங்கியிடம் சமர்ப்பித்துள்ள தகவல்கள் அனைத்தும் இந்த கணக்குடன் இணைக்கப்படும்.முதல் கட்ட தகவல்களை சமர்ப்பித்தவுடன், ஆதார் சரி பார்க்கும் கட்டம் துவங்கும். ஆதார் எண்ணை சமர்ப்பித்ததும், ஒரு முறை, ‘பாஸ்வேர்டு’ அனுப்பி வைக்கப்படும். இந்த எண்ணை சமர்ப்பித்த பின், பி.பி.எப்., கணக்கு துவக்கப்படும்.பகுதி அளவு வசதி அளிக்கும் வங்கியில், ஆரம்ப கட்ட தகவல்களை சமர்ப்பித்த பின், படிவத்தை அச்சிட்டு கையெழுத்திட்டு வங்கி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
வரி சலுகைகள் பற்றி அறியாத ஊழியர்கள்
ஊதிய அமைப்பில் உள்ள வரி சலுகை வாய்ப்புகளை பல ஊழியர்கள் அறியாமல் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.வரி சேமிப்பு முதலீடு மூலம் வருமான வரியை குறைக்க முடியும். அதே போல, ஊழியர்களுக்கான ஊதிய அமைப்பில் வரி சலுகை அளிக்கும் பிரிவுகளும் உள்ளன. உதாரணமாக எரிபொருள் கட்டணம், தொலைபேசி கட்டணம், விடுமுறை பயண சலுகை, பரிசுக் கூப்பன்கள் ஆகியவற்றுக்கு வரி விலக்கு கோர முடியும்.எனினும், நான்கில் ஒரு ஊழியர்கள் இத்தகைய சலுகைகளை சரியாக அறியாமல் இருப்பதாக, நீல்சன் இந்தியாவால் நடத்தப்பட்ட ஜேட்டா ஊழியர் நல ஆய்வு தெரிவிக்கிறது. இதன் காரணமாக, இந்த சலுகைகளை பலரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். ஏழு நகரங்களில், 194 வர்த்தக நிறுவனங்களில் 1,233 ஊழியர்கள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|