பதிவு செய்த நாள்
02 மே2018
00:33
புதுடில்லி:எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வெளிநாடுகளில், 6 கிளைகளை மூட முடிவு செய்துள்ளது.ரிசர்வ் வங்கி, வங்கிச் செயல்பாடுகள் தொடர்பாக, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறும், குறிப்பாக, வெளிநாடுகளில் லாபகரமற்ற முறையில் செயல்படும் வங்கி கிளைகளை மூடுமாறும், மத்திய நிதிச் சேவைகள் துறை, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள், அவற்றின் லாபகரமற்ற கிளைகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமின்றி, உள்நாட்டில், வங்கிக் கிளைகளை ஒருங்கிணைத்து, செலவை குறைக்கும் முயற்சியையும் துவக்கியுள்ளன.எஸ்.பி.ஐ., வெளிநாடுகளில் உள்ள கிளைகளில், லாபகரமற்ற, ஆறு கிளைகளை மூட முடிவு செய்துள்ளது.இதன்படி, சீனா, இலங்கை, ஓமன், சவுதி அரேபியா, பிரான்ஸ், போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் உள்ள கிளைகள் மூடப்பட உள்ளன.இவற்றில், சீனா, சவுதி அரேபியாவில் உள்ள கிளைகள், செப்டம்பருக்குள் மூடப்படும். இதர கிளைகளின் செயல்பாடுகள், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் முடிவிற்கு வரும் என, தெரிகிறது.இவை தவிர, மேலும், 10 கிளைகளை மூடுவது தொடர்பாக, எஸ்.பி.ஐ., பரிசீலித்து வருகிறது. ‘இஸ்ரேல் நாட்டிடம் இருந்து, பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படுவதால், டெல்அவிவ் நகரில் உள்ள கிளையை மூடும் திட்டம் இல்லை’ என, எஸ்.பி.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.எஸ்.பி.ஐ., சொத்து மதிப்பை உயர்த்தும் நோக்கில், வங்கி சாரா நிறுவனங்களில் மேற்கொண்டுள்ள பங்கு மூலதனத்தையும், திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|