பதிவு செய்த நாள்
07 மே2018
00:43
கமாடிட்டி சந்தை
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய், சர்வதேச சந்தையில், நான்கு ஆண்டுகள் புதிய உச்சத்தில் வர்த்தகமாகிறது. உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றம் கண்டு, புதிய உச்சத்தில் விற்பனை ஆகிறது.நாட்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கு முக்கியமான காரணங்கள் இரண்டு:
முதல் காரணம், கச்சா எண்ணெய் விலை, 1 பேரல், ஜனவரி மாத விலையான, 60 டாலர் என்பதில் இருந்து தற்போது, 70 டாலரை நெருங்கி உள்ளது. இரண்டாவது காரணம், இந்திய ரூபாயின் சரிவு.
கச்சா எண்ணெயைப் பொறுத்தவரை, நம் உள்நாட்டு தேவையின், 90 சதவீதம் இறக்குமதி மூலம் தான் பெறப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 3.50 ரூபாய் அளவுக்கு சரிந்து தற்போது, 66.98 ரூபாயாக உள்ளது. இந்த இரண்டு காரணங்கள் தான் விலை உயர்வுக்கு வழிவகுத்தன.
மேலும், ஒபெக் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து, தங்களது ஒட்டு மொத்த உற்பத்தியை, தினசரி, 1.8 மில்லியன் பேரல் அளவுக்கு குறைத்து, அதை சரிவர அமல்படுத்தியதன் காரணமாக, தட்டுப்பாடு அதிகரித்தது. கூடவே, இருப்பு அளவு குறைந்ததும், விலை ஏற்றத்துக்கு சாதகமாக அமைந்தது.
கடந்த வாரத்தில் மட்டும், கச்சா எண்ணெய், 1 பேரலுக்கு, 3 டாலர்கள் அளவுக்கு விலையேற்றம் கண்டது. இதற்கு, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சு மந்தமானதும், ஈரான் மீது அமெரிக்கா பொருளா தார தடை விதிக்கலாம் என்ற அச்சமும் காரணமாகி, சந்தையில் திடீர் விலை உயர்வை ஏற்படுத்தியது.
கடந்த, 2014ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், 107.70 டாலர் என்ற நிலையில் இருந்து, 2016ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், 26 டாலர் வரை சரிவு நேர்ந்தது. இதன் பிறகான இரு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த இலக்காக, 75 டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், தங்கம் விலை, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், 1 அவுன்ஸ், 1,300 டாலர் முதல், 1,360 டாலர் வரையிலான நிலையில் வர்த்தகமானது.உள்நாட்டு பொருள் வாணிப சந்தையான, எம்.சி.எக்ஸ் சந்தையில், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், 10 கிராம் தங்கத்தின் விலை, 29,061 ரூபாயில் இருந்து, 31,620 ரூபாய் வரை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. இதற்கு, நம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவே முக்கிய காரணமாகும். இதனால், ஆபரண தங்கம் விலையேற்றம் கண்டது.
கடந்த நான்கு மாதங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 63.56 ரூபாயில் இருந்து, 66.98 ரூபாயாக சரிந்தது, தங்கம் விலை உயரக் காரணமானது.2018ல், அமெரிக்க ரிசர்வ் வங்கியில், அதன் புதிய கவர்னர் பொறுப்பேற்றபோது, நிதிக் கொள்கை கூட்டமைப்பான, எப்.ஓ.எம்.சி., கூட்டத்தில், இந்த ஆண்டு வட்டி விகிதமானது, 3 முதல், 4 தடவை உயர்த்தப்படலாம் என அறிவித்தார். இதன் விளைவாக, தங்கம் மீதான முதலீட்டு ஆர்வம் குறைந்து போனது.
மேலும், அரசு கருவூலங்களின் முதலீடும் உயர்ந்து, அதன் மீதான ஆதாயமும், 3 சதவீதம் வரை உயர்ந்தது. இதனாலும், தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது.வரும் நாட்களிலும் சர்வதேச சந்தையில் தங்கம், 1,300 டாலருக்கும் கீழே வர்த்தகம் நடைபெறும் எனில், சரிவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பு
செம்பு விலை, கடந்த நான்கு வாரங்களாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் மற்றும் அமெரிக்கா, உருக்கு, அலுமினியம் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தது ஆகியவை காரணமாக, செம்பு உற்பத்தி குறைந்தது.
இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, அலுமினியத்தின் விலை, ஐந்தாண்டு உச்சத்தை, அதாவது, 1 கிலோ, 180 ரூபாய் வரை அதிகரித்தது. இதனால், அனைத்து தொழிற்சாலை கனிமங்களும் விலையேற்றம் கண்டன. செம்பு மற்றும் அலுமினியம், மின்சாரத்தை எளிதில் கடத்தும் திறன் வாய்ந்தவை.
இதனால், இவை இரண்டும் மின்சார உபகரணங்கள் மற்றும் கேபிள்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு, அதிகம் நுகரப்படுகின்றன. மேலும், வரும் காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற கோணத்திலும், செம்பு விலை உயர்ந்து வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|