பதிவு செய்த நாள்
07 மே2018
00:45
இந்திய பொருளாதாரம் அமைப்பு சார்ந்தும், சாராமலும் தொடர்ந்து இயங்கி வருவது, நாம் அனைவரும் அறிந்த உண்மை. இரண்டும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் கண்டுள்ளதையும் யாரும் மறுக்க முடியாது.
ஒன்றின் வளர்ச்சி, இன்னொன்றிலும் பெருக்கத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. வாழ்க்கை முறையாகவே இவ்விரண்டும் ஒருங்கே இயங்கிய சூழல் பல காலம் நிலைத்தது. இதற்கு ரொக்கப் பொருளாதாரம் வழி வகுத்தது.
ஆனால், காலப்போக்கில் அமைப்பு சாரா பொருளாதாரத்தின் அபரிமிதமான வளர்ச்சி, அமைப்பு சார்ந்த பொருளாதாரத்தை பாதிக்கும் சூழலை உருவாக்கியது. பொருளாதார சீர்திருத்தம் இந்த தவறான வளர்ச்சிக்கு எளிதில் வழிவகுத்து, மாற்றுப் பொருளாதாரத்தில் கறுப்பு பணம் சேகரித்து வளர்வதையே ஊக்குவித்தது.
சீர்திருத்தத்தின் பலன்கள், நேர்மையாக வரி செலுத்துவோரை விட, அப்பட்டமாக வரி ஏய்ப்பு செய்வோரையே சென்று அடைந்தது. ரொக்கமாக பணம் சேகரித்து, ரொக்கமாகவே முதலீடு செய்யும் கலாசாரமே ஓங்கியது. இதில், எங்கும் வரிகளின் நிழல் கூட படவில்லை. அடிப்படையில், சீர்திருத்தத்தின் நோக்கம் இது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் ஒட்டு மொத்த பிரதிபலிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் தெரிந்தது. அதன் அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூட மாற்றுப் பொருளாதாரத்தை கூறலாம். ரொக்க முதலீடுகளை பங்குச் சந்தைக்குள் அரசு விடவில்லை என்பதை இங்கு புரிந்து கொள்வது மிக அவசியம்.
பங்குச் சந்தைகள் பல ஆண்டுகள் தொய்வான போக்கில் இருந்ததற்கும், இது முக்கிய காரணமாக அமைந்தது. மாற்றுப் பொருளாதாரத்தால், அமைப்பு சார்ந்த பொருளாதாரம் சந்தித்த சவால்களும், பங்குச் சந்தை ஏற்றம் காணாததற்கு இன்னொரு முக்கிய காரணம்.
பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்தும், அமைப்பு சார்ந்த நிறுவன வளர்ச்சியும், வரிகளில் காண வேண்டிய வளர்ச்சியும் ஏற்படாமல், நாட்டின் பொருளாதாரம் தத்தளித்தது. இதற்கு அவசர மாற்று தேவைப்பட்டது. அது, முதலீடுகள் வழியாக அமையும் என்று ஒரு காலகட்டத்தில் அரசு நம்பியது. இதற்கு மாற்றாகத்தான், முதலீடுகளை ஏற்படுத்தும் நோக்கோடு, பெருங்கடன் பெருக்கத்தை ஏற்படுத்த, அரசு, 2007ல் இருந்து முயன்றது.
ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. மாறாக, அந்த முயற்சி இன்றைய வாராக்கடன் சுமையாக உருவெடுத்தது. அரசின் பிரச்னைகள் ஒன்றின் பின் ஒன்றாக வளர்ந்தன.ஆக, நிலையான மாற்றுப் பொருளாதார சிந்தனைக்கான அவசர தேவை உருவெடுத்தது. வருங்கால பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வரி வசூலை ஏற்படுத்துவது தான் நிலையான நெடுங்கால தீர்வு என்பதை அரசும், அதிகார வர்க்கமும் உணர்ந்தன.
அதை அவசர தேவையாகவும் அடையாளம் கண்டு, வரி சீர்திருத்தத்தின் அடுத்த கட்ட நகர்வான, ஜி.எஸ்.டி.,யை அரசு அதிரடியாக அமலுக்கு கொண்டு வந்தது. தொழில்நுட்ப ரீதியான சவால்களையும், குறைவான காலக்கெடுவையும் கடந்து, இந்த நகர்வு வெற்றி அடைந்துவிட்டதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது.
பங்குச் சந்தையும் இதைப் புரிந்து நகரும். அமைப்பு சார்ந்த பொருளாதாரம் வெகுவாக வளர்வதற்கான சூழல் ஏற்பட்டுவிட்டதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. அமைப்பு சாராமலிருப்போரும் மாறும் சூழல் வரும். நாடு அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராகி விட்டதே, கடந்த நான்கு ஆண்டுகளில் நம் சாதனை. அடுத்த ஐந்து ஆண்டுகளில், நம் வளர்ச்சி பெருகும்; பொருளாதார சூழல் மேம்படும். அதற்கான கட்டமைப்பு அமைந்துவிட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பெருவாரியான சீர்திருத்தங்கள் தொடரும் என்பதை நாம் உணர வேண்டும். சந்தையின் ஒருமித்த கருத்தாக இது மாறும் காலம் ஏற்படும். அதை முந்திக்கொள்வதே ஒவ்வொரு முதலீட்டாளரின் தற்போதைய சவால்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் பங்குச்சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|