பதிவு செய்த நாள்
10 மே2018
00:31
வாஷிங்டன்/புதுடில்லி:‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.4 சதவீதமாக உயரும்’ என, பன்னாட்டு நிதியம் தெரிவித்து உள்ளது.
இந்த அமைப்பின் ‘ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார பார்வை’ என்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பாண்டிலும், வரும் ஆண்டிலும், ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும். சர்வதேச அளவில் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. அரசியல் கொள்கைகளும் சாதகமாக உள்ளன. அத்துடன், நிதியாதாரங்களும் வலுவாக உள்ளதால், ஆசிய நாடுகளின் வளர்ச்சி நன்கு இருக்கும்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., போன்ற பாதிப்புகளில் இருந்து, இந்தியா மீண்டு விட்டது. அதனால், நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், அதன் பொருளாதார வளர்ச்சி, 7.4 சதவீதம்; அடுத்த நிதியாண்டில், 7.8 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும்.
இந்தாண்டு, சீனாவின் பொருளாதாரம், 6.6 சதவீதமாக இருக்கும். இது, அடுத்த ஆண்டு, 6.4 சதவீதமாக குறையும்.ஆசிய நாடுகளின் வளர்ச்சி நன்கு இருக்கும் என்ற போதிலும், சில இடர்ப்பாடுகளும், சவால்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, சர்வதேச சிக்கன நடவடிக்கைகள், உள்நாட்டு நலனை பாதுகாப்போம் என்ற கொள்கை முழக்கங்கள் போன்றவற்றை கூறலாம்.
மேலும், பணி செய்ய இயலாத வயதுடையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும்; உற்பத்தி வளர்ச்சியில் தொய்வும்; அதிகரித்து வரும் டிஜிட்டல் பொருளாதாரமும், சவாலான அம்சங்களாக இருக்கும்.ஆசிய நாடுகளில், பல ஆண்டுகளுக்குப் பின், தற்போது தான், பணவீக்கம் மிகக் குறைவாக உள்ளது. முக்கியமாக, உணவு மற்றும் எரிசக்தி துறைகள் நீங்கலான பணவீக்கம், பல நாடுகளில் குறைந்து காணப்படுகிறது.
கடந்த,2017ல், ஆசிய பிராந்தியத்தில் முன்னேறிய நாடுகளின் சராசரி பணவீக்கம், மதிப்பீட்டை விட, 0.6 சதவீதம் குறைவாக இருந்தது. முன்னேறி வரும் நாடுகளில், சராசரி பணவீக்கம், இலக்கை விட, 0.8 சதவீதம் குறைந்து காணப்பட்டது.எனினும், கச்சா எண்ணெய் விலை உயர்வால், செப்டம்பர் முதல், பணவீக்கம் சற்று அதிகரித்து வருகிறது.
சர்வதேச நிலவரங்களில் காணப்படும் தற்காலிக மாற்றங்கள், உணவு பொருட்கள் விலை சரிவு மற்றும் இறக்குமதி பொருட்களின் பணவீக்கம் குறைந்திருப்பது போன்றவற்றால், ஆசிய பிராந்தியத்தின் பணவீக்கம் குறைவாக உள்ளது.
பணவீக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறைவாக உள்ளதும், ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால், பணவீக்கம் அதிகரிக்கும்பட்சத்தில், அதை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் போது, உற்பத்தி குறையும் அபாயமும் உள்ளது. அதன் காரணமாக, ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள், பணவீக்க அறிகுறிகளை உன்னிப்பாக கவனித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா – சீனாஆசிய நாடுகள், சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து உந்துசக்தியாக விளங்கி வருகின்றன. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில், ஆசிய நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதில், 40 சதவீத பங்களிப்பை, இந்தியாவும், சீனாவும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|