பதிவு செய்த நாள்
11 மே2018
00:50
புதுடில்லி:‘‘பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து, சச்சின் பன்சால் விலகுவது, என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,’’ என, அந்நிறுவனருள் ஒருவரான, பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.வலைதளத்தில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை, அமெரிக்காவின், ‘வால்மார்ட்’ நிறுவனம், 1,600 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 1.12 லட்சம் கோடியாகும்.
இந்த ஒப்பந்தப்படி, பிளிப்கார்ட் நிறுவனர், சச்சின் பன்சால், 5.5 சதவீத பங்குகளை ஒப்படைத்து, 100 கோடி டாலர், அதாவது, 6,800 கோடி ரூபாய் பெற்று, வெளியேறியுள்ளார்.ஆனால், பின்னி பன்சால், பிளிப்கார்ட் நிறுவனத்தில், 6 சதவீத பங்குகளுடன், அதன் தலைமை செயல் அதிகாரியாக தொடர்ந்து நீடிக்கிறார்.
இந்த இரு பன்சால்களும் உறவினர்கள் அல்ல என்ற போதிலும், டில்லி, ஐ.ஐ.டி.,யில் ஒன்றாக படித்த போது, ஆழமான நட்பு உருவானது.இவர்கள் இருவரும் இணைந்து, 2007ல், நான்கு லட்சம் ரூபாய் முதலீட்டில் உருவாக்கிய,பிளிப்கார்ட், 11 ஆண்டுகளில், 1.47 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, பின்னி பன்சால் கூறியதாவது:கடந்த, 2005ல் படித்து முடித்து, பெங்களூரு வந்தோம். சச்சின், ‘அமேசான்’ நிறுவனத்தில் சேர்ந்தார். அவர் பரிந்துரையில், எனக்கும் அங்கு வேலை கிடைத்தது. ஆனால், சில மாதங்களில் விலகி, இருவரும் இணைந்து, பிளிப்கார்ட் வலைதள நிறுவனத்தை உருவாக்கி, முதலில் புத்தகங்களை விற்பனை செய்ய துவங்கினோம்.
இருவரும், ஒரே பைக்கில், தினமும், 50 கி.மீ., சுற்றி, அலைந்து, பல்வேறு பதிப்பகங்களிடம் புத்தகங்களை வாங்கி, அவற்றை, ‘பேக்’ செய்து, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்போம். எங்கள் உழைப்பின் பயனால், இன்று வாடிக்கையாளர் எண்ணிக்கை, 10 கோடியை தாண்டியுள்ளது. சச்சினுக்கு நானும், எனக்கு அவரும் துாண் போல் ஆதரவாக இருந்தோம். தற்போது, சச்சின் விலகுவது, எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இது தான் தருணம்
பிளிப்கார்ட் நிறுவனத்தில் என் பணி முடிந்து விட்டது. என் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்து விட்டதால், வெளியேறுகிறேன்.
சச்சின் பன்சால்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|