பதிவு செய்த நாள்
13 மே2018
00:12
மும்பை:‘பிளிப்கார்ட் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும்’ என, அந்நிறுவனத்தை கையகப்படுத்தும், ‘வால்மார்ட்’ நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின், ஆர்கன்சாஸ் மாகாணத்தில், பென்டன்வில்லி நகரில் தலைமையகத்தை கொண்டுள்ள வால்மார்ட் நிறுவனம், சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், வலைதளம் வாயிலான சில்லரை விற்பனையிலும் களமிறங்க உள்ளது.இதற்காக, பிளிப்கார்ட் நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை, 1.12 லட்சம் கோடி ரூபாய் வாங்குவதாக, சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து, அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம், வால்மார்ட் அறிக்கை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பிளிப்கார்ட் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்த பின், நான்கு ஆண்டுகளுக்குள், அந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும்.
இந்த பங்கு வெளியீடு, தற்போது, பிளிப்கார்ட் நிறுவனத்தில் மேற்கொள்ளும் முதலீட்டு மதிப்பிற்கு, குறையாமல் இருக்கும்.வால்மார்ட் சார்பில், பிளிப்கார்ட் நிறுவன இயக்குனர் குழுவில், ஐந்து பேர் நியமிக்கப்படுவர். வருங்காலத்தில், பெரும்பான்மை இயக்குனர்கள் ஆதரவுடன், மேலும் ஒரு இயக்குனர் நியமிக்கப்படலாம். சிறுபான்மை பங்குகளை வைத்துள்ளோர் தரப்பில், இரண்டு இயக்குனர்கள் நியமிக்கப்படுவர். அவர்களில், பிளிப்கார்ட் நிறுவனர், பின்னி பன்சால், ஒரு இயக்குனராக இருப்பார்.
பின்னி பன்சால் மற்றும் இயக்குனர் குழுவின் ஆலோசனைப்படி, பிளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் இதர முக்கிய பொறுப்புகளில் உள்ளோரை நியமிக்கவோ அல்லது மாற்ற வோ, வால்மார்ட்டுக்கு அதிகாரம் உள்ளது.கையகப்படுத்தும் பணிகள் முடிவதற்கு முன் அல்லது ஓராண்டிற்குள்ளோ, 300 கோடி டாலர் மதிப்பிற்கு சாதாரண பங்குகளை வெளியிடுமாறு, பிளிப்கார்ட் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளில்...
வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்த போதிலும், சந்தை போட்டி கண்காணிப்பு அமைப்பு அனுமதி அளித்தால் தான், இணைப்பு நடவடிக்கை செயல்பாட்டிற்கு வரும்.கடந்த, 2007ல், சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோர் இணைந்து, நான்கு லட்சம் ரூபாய் முதலீட்டில், பிளிப்கார்ட் நிறுவனத்தை தோற்றுவித்தனர். இந்நிறுவனம், 11 ஆண்டுகளில், 1.47 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.
முப்பதாயிரம் பணியாளர்களுடன், ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டினாலும், இந்நிறுவனம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பின்வாங்குகிறது
பிளிப்கார்ட்டில் கொண்டுள்ள, 22 சதவீத பங்குகளை, வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்க, ‘சாப்ட்பேங்க்’ தயங்குவதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம், பிளிப்கார்ட்டில், 250 கோடி டாலர் முதலீடு செய்து வாங்கிய பங்குகளை, 9 மாதங்களில், 450 கோடி டாலருக்கு, வால்மார்ட்டுக்கு விற்பனை செய்ய முன்வந்தது. எனினும், வரி பிரச்னை, பங்கு விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு போன்றவற்றால் பின்வாங்குவதாக தெரிகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|