பதிவு செய்த நாள்
14 மே2018
00:20
அதிக அளவில் சேமிக்க முடியாமல் போவதற்கு, வரைமுறை இல்லாத செலவுகளே முக்கிய காரணமாக அமைகிறது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனில், தேவையில்லாத பொருட்களை வாங்குவதை, கைவிட வேண்டும். ஏனெனில், தேவையில்லாத பொருட்களை வாங்குவதன் வாயிலாக, சேமிப்பதற்கான தொகை குறைவதோடு, பணத்தின் பொருளாதார ஆற்றலும் முடங்கி விடுகிறது. இதை தவிர்ப்பதற்கான வழிகள்:
எது முக்கியம்
வீண் செலவுகளை தவிர்க்க, முதலில் செய்ய வேண்டியது எது முக்கியம் என்பதை அறிந்திருப்பதாகும். உங்களுக்கு எவை எல்லாம் முக்கியம் என்பது தெளிவாக தெரிந்திருந்தால், அதற்கேற்ப செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். அத்தியாவசிய பொருட்கள் முக்கியமானவை, ஆனால் வார இறுதி பொழுதுபோக்கு கட்டுப்படுத்தக்கூடியது.
பட்ஜெட் தேவை
தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்கு முக்கிய காரணம் பட்ஜெட் போடாமல் செலவு செய்வதாகும். மாதாந்திர பட்ஜெட்டை வகுத்து அதற்கேற்ப செலவு செய்தால் வீண் செலவுகளை எளிதாக தவிர்க்கலாம். கடின மாக உழைத்து சம்பாதித்த பணத்தை, எப்படி செலவிட வேண்டும் என திட்டமும், ஒழுங்கும் அவசியம்.
ரொக்கம் மட்டும்
கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்குவது மிகவும் வசதியானது. ஆனால் இதன் காரணமாகவே ஆசைப்பட்ட பொருட்களை எல்லாம் வாங்கும் நிலை இருக்கலாம். எனவே எல்லாவற்றுக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல், ரொக்கமாக கொடுத்து வாங்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். பொருட்களின் தேவைக்கேற்ப, ரொக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.
தாமதம் நல்லது
எந்த பொருளையும் நினைத்தவுடன் வாங்கிவிடாமல், தள்ளிப்போட வேண்டும். இடைப்பட்ட காலத்தில், அந்த பொருள் தேவை தானா என, யோசிக்க வேண்டும். புதிய போன் அல்லது புதிய ஆடை போன்றவற்றுக்கு இது பொருந்தும். ஒரு வாரம் காலம் காத்திருப்பது எனும் உத்தியையும் கடைப்பிடிக்கலாம். ஒரு வாரம் ஆன பின்னும் அந்த பொருள் தேவை என நினைத்தால் வாங்கலாம்.
உங்கள் தேவை
பெரும்பாலானோர், மற்றவர்கள் மத்தியில் நல்லவிதமாக தோன்ற வேண்டும் என்பதற்காகவே, பல பொருட்களை வாங்குகின்றனர். ஆனால், மற்றவர்கள் நினைப்பதை மறந்துவிட்டு, உங்களுக்கு தேவையா என்பதையே மனதில் கொள்ள வேண்டும். மற்றவர்கள் உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக, எந்த பொருளையும் வாங்க வேண்டாம். உங்கள் நிதி நலனே முக்கியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|