பதிவு செய்த நாள்
14 மே2018
00:26
பங்குச்சந்தை முதலீட்டில் பலன பெற விரும்புகிறவர்கள், தங்களால் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்களில், அதிகம் கவனம் செலுத்துவது சரியான உத்தியாக அமையும்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற நேரம் எது?, அதிக லாபம் அளிக்ககூடிய பங்குகளை எப்படி அடையாளம் கண்டு வாங்குவது? போன்ற கேள்விகள் சமபங்கு முதலீட்டில் ஆர்வம் உள்ளவர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளாக இருக்கின்றன.பங்குச்சந்தை போக்கை வெற்றி கரமாக கணித்து அதனடிப்படையில் முதலீடு செய்து லாபம் பார்க்க முடியும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த கேள்விகள் அமைகின்றன. சந்தையின் போக்கு அல்லது குறிப்பிட்ட பங்குகளின் போக்கை சரியாக கணிக்க முடியும் எனும் நம்பிக்கையில் பங்கு சந்தையை அணுகுவதும் பழக்கமாக இருக்கிறது.
ஆனால், பங்குச்சந்தையின் போக்கை கணிப்பது என்பது மிகவும் சிக்கலானது. அதை எல்லா நேரங்களிலும் வெற்றிகரமாக செய்வது சாத்தியமில்லை. அதிலும் தொடர்ந்து நிகழ்த்துவது என்பது சாத்தியம் இல்லை. பங்குச்சந்தையின் போக்கு ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகும் என்பது இயல்பானது.
இதற்கு பலவித காரணங்கள் இருக்கின்றன. இதை கணிக்க முடியும் எனும் நம்பிக்கையும், அதன் அடிப்படையில் பங்குகள் உயரும் போது முதலீடு செய்வது நல்ல பலனைத்தரும் என்பதும் ஒரு முதலீட்டு உத்தியாக அமைகிறது. இத்தகைய முதலீட்டாளர்கள் சந்தை சரியும் போது விலகி நிற்கும் தன்மையையும் பெற்றுள்ளனர்.
யூகத்தின் தாக்கம்
பங்குச்சந்தை முதலீடு அதிக பலன் தரக்கூடிய என்றாலும், அது நீண்ட கால நோக்கிலானது எனும் அடிப்படையை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒருவரின் முதலீட்டு உத்தி அதாவது பங்குகளை வாங்குவது என்பது, நிதி இலக்கிற்கு ஏற்ப அமைய வேண்டும். மாறாக குறுகிய கால பலனை கருத்தில் கொண்டு, கணிப்பின் அடிப்படையில் முதலீடு செய்தால், எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
தனி பங்குகளின் போக்கும் சரி, மொத்தமாக சந்தையின் போக்கும் சரி, எண்ணற்ற காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும் சந்தையின் போக்கும் தனி பங்குகளின் போக்கும் கூட, மாறுபட்டதாக அமையலாம். உதாரணத்திற்கு சரியும் சந்தையில் ஏற்றம் கண்ட பங்குகள் இருக்கலாம். எனவே தான் யூகத்தின் அடிப்படையிலான முதலீடு ஏற்றதல்ல என கருதப்படுகிறது.
பொதுவாகவே திட்டமிட்ட முதலீட்டை மேற்கொள்வதாக இருந்தால், எல்லா நேரமும் சரியான நேரமே என்று கருதப்படுகிறது. ஒருவர் தனது தேவையின் அடிப்படையில் நேரடியாக அல்லது முறைமுகமாக பங்குகளில் முதலீடு செய்துவிட்டு காத்திருந்தால், அந்த முதலீடு உரிய பலனை அளிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே தான், பங்கு முதலீட்டில் தங்களால் கட்டுப்படுத்த முடியாத அம்சங்கள் பற்றி, முதலீட்டாளர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்கின்றனர்.
பங்குகளின் விலை
இதற்கு மாறாக, எந்த பங்கை வாங்குவது? எவ்வளவு வாங்குவது மற்றும் எந்த விலையில் வாங்குவது? உள்ளிட்ட அம்சங்கள் முதலீட்டாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவை. நிறுவன வர்த்தகத்தின் தன்மை, அதன் லாபம் மீட்டும் தன்மை, அதன் போட்டி சூழல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில், எந்த நிறுவன பங்குகளை வாங்கலாம் என முடிவு செய்யலாம்.நல்ல பங்கு என்றாலும், ஒரே நிறுவன பங்குகளை அதிக அளவில் வாங்குவது ரிஸ்காக அமையும். எனவே எந்த அளவு பங்குகளை வாங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டும். பரவலாக்கம் நல்ல உத்தி. அதே போல, எந்த விலையில் வாங்கலாம் என்பதையும் முதலீட்டாளர் தீர்மானிக்கலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|