பதிவு செய்த நாள்
16 மே2018
00:44
மாநிலத்துக்குள், ‘இ – வே பில்’ நடைமுறை அறிமுகமான பின், தமிழகத்தில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘ஆன்லைன்’ மூலம் அனுமதி பெறும், இ – வே பில், நாடு முழுவதும் ஏப்.,1ல் அமல்படுத்தப்பட்டது.
மாநிலத்துக்கு உள்ளேயே, சரக்குகளை எடுத்துச் செல்ல, இ – வே பில் பெறும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த முறை, கர்நாடகத்தில், ஏப்., 1 முதலும், இதர மாநிலங்களில் ஏப்., 15 முதலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களும், ஜூன் மாதம் முதல் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 18 மாநிலங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தி உள்ளன.
இது குறித்து, வணிக வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஜூன், 2 முதல், மாநிலத்துக்குள் சரக்குகளை எடுத்துச் செல்ல, இன்ட்ரா ஸ்டேட், இ – வே பில் பெறும் முறை செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் பின், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு, கண்டிப்பாக, இ – வே பில் பெறுவது அவசியம்.
தற்போது, மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச் செல்ல, நாள் ஒன்றுக்கு, 60 ஆயிரம் இ – வே பில்கள் பதிவாகின்றன. மாநிலத்துக்குள் நடைமுறைப்படுத்தும் போது, ஒன்றரை லட்சம் வரை பதிவாகும் என, எதிர்பார்க்கிறோம்.
மாநிலங்களுக்கிடையே, இ – வே பில் பெறுவதில், இதுவரை எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. ஆனால், மாநிலத்துக்குள் அறிமுகமான பின், இதில், மோசடி நடைபெற அதிக வாய்ப்பு இருக்கிறது.இதற்காக உள்ள ரோந்து குழுக்கள், இ – வே பில் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவர்.
இதுவரை, இ – வே பில் பெறாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. ஜூன் மாதத்துக்குப் பின், இ – வேல் பில் பெறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மாநிலங்களுக்கிடையே, சரக்குகளை எடுத்துச் செல்ல, 21 லட்சம் இ – வே பில்கள் இதுவரை தமிழகத்தில் பதிவாகி உள்ளன. ஏப்ரல் முதல் இந்த இ – வே பில் பதிவு கணக்கிடப்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் இ – வே பில்கள் தமிழகத்தில் பதிவாகின்றன.
–நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|