பதிவு செய்த நாள்
17 மே2018
01:31
திருப்பூர் : ‘நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 21.40 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது’ என, ஏ.இ.பி.சி., தலைவர் தெரிவித்தார்.
திருப்பூரை அடுத்த பழங்கரையில் உள்ள, ஐ.கே.எப்., வளாகத்தில், ‘இந்தியா நிட் – பேர்’ 45வது ஆயத்த ஆடை கண்காட்சியை, எம்.பி., சத்தியபாமா திறந்து வைத்தார். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், ஏ.இ.பி.சி., தலைவர் மஹூ, இந்தியா நிட் – பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், பொதுச்செயலர் விஜயகுமார், ஏ.டி.டி.சி., தலைவர் ராகேஷ் வைத் உட்பட தொழில் துறையினர் பங்கேற்றனர்.
ஏ.இ.பி.சி., தலைவர் மஹூ பேசியதாவது: திருப்பூரில், ஏற்றுமதி வர்த்தகம், 15 சதவீதம் சரிந்துள்ளது. பல வகை வரியினங்களை ஒருங்கிணைத்து, ஜி.எஸ்.டி.,யை கொண்டு வந்தது, நல்ல முயற்சி. ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் முறை சரியில்லை. டியூட்டி டிராபேக், 7.5 சதவீதம், மாநில வரிச் சலுகை, 3.5 சதவீதம், எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தில், 2 சதவீதம் என, மொத்தம், 13 சதவீத சலுகை, ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது; தற்போது, 7.70 சதவீதமாக குறைந்துவிட்டது.
உலக வர்த்தக அமைப்பு, நம் ஏற்றுமதியாளர்களுக்கு நேரடி சலுகை வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலிலும், எம்.இ.ஐ.எஸ்., எனப்படும் சலுகை, வரும் ஜூன் மாதத்துக்கு பின்னரும், 4 சதவீதமாக தொடரும் என வர்த்தக அமைச்சகம் அறிவித்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. நிதியாண்டின் முதல் மாதத்திலேயே, வர்த்தகம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2017- – 18ம் நிதியாண்டின் ஏப்ரல் மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 11,272.24 கோடி ரூபாய். நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டின் ஏப்ரல் மாதம், 8,859.67 கோடியாக, 21.40 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தகம் வளர்ச்சி பெற, அரசு சலுகை மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சியில், பருத்தி மற்றும் செயற்கை நுாலிழைகளில் தயாரிக்கப்பட்ட, புதிய வகை டிசைன்களுடன் கூடிய ஆடை ரகம், விளையாட்டு ஆடை, கிருமி தொற்றாத ஆடை, வியர்வை உறிஞ்சும் ஆடை, ‘3டி பிரின்டிங்’ பொறிக்கப்பட்ட ஆடை என, ஏராளமான ஆயத்த ஆடைகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|