பதிவு செய்த நாள்
17 மே2018
01:36
புதுடில்லி : அன்னிய முதலீட்டாளர்கள், ‘பார்டிசிபேட்டரி நோட்’ வாயிலாக, இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த ஏப்ரலில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
வெளிநாட்டினர், இந்திய பங்குச் சந்தைகளில், நேரடியாக பதிவு செய்து கொள்ளாமல், பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய, பார்டிசிபேட்டரி நோட் உதவுகிறது. இதை, ‘செபி’யிடம் பதிவு செய்த, அன்னிய முதலீட்டு மேலாண்மை நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த வகை முதலீடுகளில், கறுப்பு பணம் அதிகளவில் புழங்குவதாக கூறப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு, பார்டிசிபேட்டரி நோட் முதலீடுகள் தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகியவை, பார்டிசிபேட்டரி நோட் வாயிலாக முதலீடு செய்ய, செபி தடை விதித்தது. மேலும், கறுப்பு பண முறைகேடுகளை தடுக்க, ஒவ்வொரு முதலீட்டிற்கும், 1,000 டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது போன்ற காரணங்களால், பார்டிசிபேட்டரி நோட் வாயிலான முதலீடு, 2017 ஜூன் முதல் குறைந்து வருகிறது. முந்தைய, எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, செப்டம்பரில் முதலீடு குறைந்தது.
எனினும், அக்டோபரில் உயர்ந்த முதலீடு, நவம்பர் முதல், இந்தாண்டு ஏப்ரல் வரை தொடர்ந்து குறைந்து வந்தது. ஏப்ரல் நிலவரப்படி, பார்டிசிபேட்டரி நோட் வாயிலான முதலீடு, 1,00,245 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, மார்ச்சில், 1,06,403 கோடி; பிப்ரவரியில், 1,06,760 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இதற்கு முன், 2009ல், பார்டிசிபேட்டரி நோட் முதலீடு, 97,885 கோடி ரூபாய் என்ற அளவில் மிகவும் குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|