பதிவு செய்த நாள்
17 மே2018
01:39
புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 11 மாநிலங்களில் மிகவும் குறைவாக உள்ளது குறித்து ஆய்வு செய்து, உரிய தீர்வு காண, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த, 2017, ஜூலை 1ல், நாடு முழுவதும், புதிய வரி விதிப்பான, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தது. முந்தைய வரி விதிப்பில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறுவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பிற்கு, மத்திய அரசு இழப்பீடு வழங்குகிறது.
கூடுதல் வரி :
இதற்காக, ஆடம்பர பொருட்கள், சிகரெட், கார் போன்றவற்றுக்கு, அதிகபட்சமாக நிர்ணயித்துள்ள, 28 சதவீத ஜி.எஸ்.டி., உடன், கூடுதல் வரிகள் வசூலிக்கப்படுகின்றன. இவ்வாறு வசூலிக்கப்பட்ட, 41 ஆயிரத்து, 147 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., இழப்பீடாக, மாநில அரசுகளுக்கு கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டது. இதன் மூலம், மாநிலங்களின் வரி வருவாய் பற்றாக்குறை, படிப்படியாக குறைந்து, கடந்த நிதியாண்டு நிலவரப்படி, சராசரியாக, 17 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
இருந்தபோதிலும், இந்தாண்டு, பிப்ரவரி நிலவரப்படி, 11 மாநிலங்கள், அதிகபட்ச வரி வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. இதில், இமாச்சல பிரதேசத்தின் வரி வருவாய் பற்றாக்குறை, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த பற்றாக்குறை, பஞ்சாப், உத்தரகண்ட், பீஹார் மாநிலங்களில், தலா, 40 சதவீதமாக உள்ளன. ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்கள், தலா, 30 சதவீதம் வரி வருவாய் பற்றாக்குறையை சந்தித்துள்ளன. இது, மத்திய பிரதேசத்தில், 28 சதவீதமாகவும், அசாம், ஜார்க்கண்ட், திரிபுரா, ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில், தலா, 20 சதவீதமாகவும் உள்ளன.
தீர்வு :
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இம்மாதம், 4ம் தேதி நடைபெற்ற, 27வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வருவாய் குறைவாக உள்ள மாநிலங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாநிலங்களில், ஜி.எஸ்.டி., வருவாய் ஏன் குறைவாக உள்ளது என்பதை கண்டறிந்து, வரி வருவாய் உயர்வுக்கான ஆலோசனைகளையும், தீர்வுகளையும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவுரையின் பேரில், தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன், அடுத்த வாரம், பஞ்சாப், பீஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் விவாதிக்க உள்ளார். அப்போது, ஜி.எஸ்.டி., வருவாய் குறைவுக்கான காரணங்களை அலசி, உரிய தீர்வு காணப்படும் என, தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் – ஆந்திரா – தெலுங்கானா :
ஜி.எஸ்.டி., அமல் காரணமாக ஏற்பட்டுள்ள வரி வருவாய் பற்றாக்குறை, இதர மாநிலங்களை விட, தமிழகம், குஜராத், தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் டில்லியில், 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
முந்தைய, ‘வாட்’ வரி விகிதத்தை விட, ஜி.எஸ்.டி.,யில், மாநிலங்களின் பங்கான, எஸ்.ஜி.எஸ்.டி., வரி குறைவாக இருந்தாலும், வரி வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும். புதிய வரியை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சுணக்கத்தாலும், வசூல் குறையலாம். வாங்கும் சக்தி குறைவாக உள்ள காரணத்தாலும், மாநிலங்களின் வரி வருவாயில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு.
-அபிஷேக் ஜெயின், பங்குதாரர், எர்னஸ்ட் அண்டு யங்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|