பதிவு செய்த நாள்
18 மே2018
00:45
புதுடில்லி : ‘‘வங்கித் துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,’’ என, மத்திய நிதியமைச்சராக, தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள, பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
டில்லியில், அவர் தலைமையில், பொதுத் துறை வங்கி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பட்டியலில் உள்ள, பொதுத் துறையைச் சேர்ந்த, 11 வங்கிகளின் நிலவரம், வாராக் கடன்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பியுஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, பொதுத் துறையைச் சேர்ந்த அனைத்து வங்கிகளும், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வங்கிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் ஒத்துழைப்பு மற்றும் நிதி சார்ந்த அமைப்புகளின் ஆதரவுடன், வங்கித் துறை விரைவில் சீரமைக்கப்படும் என, உறுதி கூறுகிறேன்.
வங்கித் துறை வளர்ச்சி காண்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும். பொதுத் துறை வங்கிகளில், உச்சபட்ச நேர்மை, பொறுப்பு ஆகியவை உறுதி செய்யப்படும். மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல், ரிசர்வ் வங்கி, வங்கித் துறையை சீராக கண்காணித்து வருகிறது. கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முந்தைய ஆட்சியில், இது போன்ற தீவிரம் காட்டப்படவில்லை. கடந்த ஆட்சியில், பாரபட்ச முறையில், முறைகேடாக வழங்கப்பட்ட கடன்கள் தான், இன்று வங்கித் துறையின் சிக்கலுக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
கெடு விதிக்க திட்டம் :
ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் உள்ள, 11 வங்கிகளுக்கு, வாராக் கடன் பிரச்னையில் இருந்து மீண்டு வர, கெடு விதிக்கவும்; குறித்த காலத்திற்குள் வங்கிகள் சீரமைக்கப்படும் என, அவற்றின் இயக்குனர் குழுக்களிடம் உறுதி பெறுவது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|