பதிவு செய்த நாள்
18 மே2018
00:48
மும்பை : வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்ய, புதிதாக துவக்கப்படும் ‘வென்ச்சர் கேப்பிடல்’ நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுவது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், சேவைகள் போன்றவற்றில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், இத்துறையில் முதலீடு செய்ய, ‘வென்ச்சர் கேப்பிடல்’ எனப்படும் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
லாபம் :
இவை, புதுமையான கருத்துருவில் உருவாக்கப்படும் ஒரு தொழிலுக்கு, துவக்க நிலையிலேயே முதலீடு செய்கின்றன. அந்த தொழில், பின்னாளில் லாபமளிக்குமா என, உறுதியாக தெரியாத நிலையில் மேற்கொள்ளப்படும் முதலீடு என்பதால், ‘துணிகர முதலீடு’ என்றழைக்கப்படுகிறது. ‘பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், ஓலா’ போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு, துணிகர முதலீட்டு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.
இந்தாண்டு துவங்கி இதுவரை, புதிதாக துவக்கப்பட்ட ஆறுக்கும் அதிகமான துணிகர முதலீட்டு நிறுவனங்கள், முதன் முதலாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், முதலீடு செய்துள்ளன. இந்த வகையில், இன்போசிஸ் நிறுவனருள் ஒருவரான நந்தன் நீலேகனியின் பன்டமென்டம்; சஞ்சீவ் அகர்வாலின், ஹெலியன் வென்ச்சர்ஸ்; பிளிப்கார்ட் நிறுவனர்களின் முதலீட்டு ஆலோசகரான சைலேஷ் துல்ஷன் துவக்கியுள்ள, 021 கேப்பிடல் ஆகியவை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளன.
சீனாவைச் சேர்ந்த, யுனிகார்ன் கேஷ்பஸ் நிறுவனத்தின், ஜேட்வேல்யு பின்டெக்; தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்யும், லியோ கேப்பிடல், ரஷ்யாவைச் சேர்ந்த, ‘எமரி கேப்பிடல்’ ஆகிய நிறுவனங்களும், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன.
வளர்ச்சி :
இவை தவிர, வட அமெக்கா, ஐரோப்பா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில், தொழில்நுட்பம், எரிசக்தி, பொழுதுபோக்கு துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனங்களில் முதலீடு செய்யும், ‘யெஸ் கேப்பிடல்’ நிறுவனமும், குறிப்பிடத்தக்க நிதியுதவியை வழங்கியுள்ளது.
அவென்டஸ் கேப்பிடல் நிறுவனத்தின் இணை தலைவர் பங்கஜ் நாயக் கூறியதாவது: சர்வதேச நிறுவனங்களின் போட்டிக்கு இடையிலும், உள்நாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறப்பாக செயல்படுகின்றன. அதனால் தான், முதலீடுகள் குவிகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சுய வளர்ச்சியுடன், முதலீட்டாளர்களுக்கும் மதிப்பை உருவாக்கித் தருகின்றன.
அதனால், துணிகர முதலீட்டு நிறுவனங்கள், இடர்ப்பாட்டிற்கு வாய்ப்பு உள்ள போதிலும், தொடர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், பல கட்டங்களாக, முதலீடுகளை மேற்கொள்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த, 10 ஆண்டுகளாக, துணிகர முதலீட்டு நிறுவனங்களின் வர்த்தகம் சாதாரணமாகவே இருந்தது. அதனால், இத்தகைய நிறுவனங்களில் இருந்து பலர் வெளியேறி, புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்களை துவக்கி வருகின்றனர். அவர்களுக்கு உள்ள அனுபவத்தால், வளர்ச்சி வாய்ப்புள்ள, ‘ஸ்டார்ட் அப்’ துறையில் முதலீடு செய்கின்றனர்.
-ஆனந்த் லுனியா , இந்தியா கோட்டன்ட், துணிகர முதலீட்டு நிறுவனம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|