பதிவு செய்த நாள்
19 மே2018
01:30
சென்னை : வெயில் அதிகரிப்பு காரணமாக, சாத்துக்குடி கொள்முதல் விலை, இரு மடங்காக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில், மாம்பழம், சாத்துக்குடி பழங்களின் சீசன் காரணமாக வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்படும் சாத்துக்குடி கொள்முதல் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து, பழ கமிஷன் தலைவர் சீனிவாசன் மற்றும் துணை தலைவர் குமார் கூறியதாவது:வெயில் காரணமாக, சாத்துக்குடி கொள்முதல் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு, 1 டன் பழம், 40 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதே பழம் தற்போது, 82 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வளவு விலை கொடுத்து கொள்முதல் செய்தது சென்னை வியாபாரிகள் தான்.
இரண்டு மற்றும் மூன்றாம் தர பழங்கள், 1 கிலோ, 60 முதல், -80 ரூபாய் வரை கிடைக்கின்றன. வெயில் சீசன் அதிகமாகி உள்ளதாலும், முகூர்த்த சீசன் என்பதாலும், சாத்துக்குடி கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை.
ஆந்திராவில் இருந்து, பங்கனப்பள்ளி மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. மொத்த விலையில், 1 கிலோ, 40 – 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஹிமாயத் வகை, 70 – 100 ரூபாயாகவும், கோவா, 50 – 60 ரூபாயாகவும், செந்துாரம், 30 – 50 ரூபாயாகவும் உள்ளன. வியட்னாம், தாய்லாந்தில் இருந்து வரும் டிராகன்புரூட், 22 எண்ணிக்கை கொண்ட பெட்டி, 650 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கறுப்பு திராட்சை, நான்கு கிலோ கொண்ட பெட்டி, 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சிலி, வாஷிங்டன் ஆப்பிள், 20 கிலோ 2,600 – 2,800 ரூபாய் வரை விற்பனையாகிறது. சப்போட்டா, 1 கிலோ, 20 – 40 ரூபாயாகவும்; தர்பூசணி, 15 – 20 ரூபாயாகவும்; பப்பாளி, 15 – 25 ரூபாயாகவும்; பைனாப்பிள், 35 – 45 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பச்சை பட்டாணி விலை அதிகரிப்பு
சென்னையில், பச்சை பட்டாணி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
உள்ளூர் உணவு தானிய உற்பத்தி, நிறைவாக இருப்பதால், பருப்பு வகைகளின் விலை சராசரி நிலையிலேயே உள்ளது. கொத்தவால்சாவடி உணவு தானிய மொத்த விற்பனை சந்தையில், பருப்பு வகைகளின் விலை, ஏற்ற இறக்கம் இல்லாமல், சமநிலையிலேயே உள்ளது. கடலை பருப்பு, 1 கிலோ, 46 – 48 ரூபாயாக உள்ளது.துவரம் பருப்பு சுமார் ரகம், 1 கிலோ, 48 ரூபாயாகவும், தரமான பருப்பு, 1 கிலோ, 67 – 69 ரூபாயாகவும் உள்ளது. உளுந்தம் பருப்பு, 1 கிலோ, 67 ரூபாயாக உள்ளது. இதிலேயே சுமார் ரகம், 58 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பச்சை பட்டாணி விலை மட்டும் கடந்த சில மாதங்களோடு ஒப்பிடுகையில், ஏறுமுகத்தில் உள்ளது. 48 ரூபாய்க்கு விற்று வந்த பச்சை பட்டாணி, தற்போது, 1 கிலோ, 57 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 35 ரூபாய்க்கு விற்ற, 1 கிலோ வெள்ளை பட்டாணி, 39 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அலங்கார மலர்கள் விற்பனை உயருமா?
‘திருமண அலங்காரத்திற்கு பயன்படும் ரோஜா, ஜப்ரா மலர் வகைகள் விற்பனை உயரவில்லை’ என, வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது: கோயம்பேடு மலர் சந்தையில், மல்லி வரத்து அதிகரித்ததால், மற்ற மலர் வகைகளின் விற்பனை குறைந்துள்ளது. ஆந்திராவில் இருந்து வரும் மல்லி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மல்லி, 1 கிலோ, 120 – 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பெங்களூரு மற்றும் ஓசூரிலிருந்து வரும் ரோஜா வகைகளில், சிம்லா ரோஜா மட்டுமே அதிகபட்சமாக, 1 கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பன்னீர் உள்ளிட்ட ரோஜா வகைகள், 60 – 100 ரூபாய் வரை விற்பனையாகின்றன. சம்பங்கி, 50 – 80 ரூபாயாகவும், கனகாம்பரம், 1 கிலோ அதிகபட்சம், 300 ரூபாயாகவும் விற்பனையாகின்றன. சாமந்தி, 60 – 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெயில் மற்றும் வரத்து அதிகரிப்பால், தாமரை, மொத்த விலையில் ஒரு பூ, ஒரு ரூபாய் எனும் அளவுக்கு குறைந்துள்ளது.
அலங்காரத்திற்கு பயன்படும் செண்டு பூ, 1 கிலோ, 50 ரூபாயாக உள்ளது. மேலும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு பயன்படும் ரோஜா, ஜப்ரா, ஆர்கிட் போன்ற மலர் மற்றும் இலை வகைகள் விற்பனை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: மலர்கள் விற்பனையும், வரத்தும் கடந்தாண்டை விட குறைவாகவே உள்ளது. திருமணம் சீசன் துவங்கியுள்ளதால், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்துள்ளோம். தற்போது ரோஜா, 1 கட்டு, 130 – 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஜப்ரா, 1 கட்டு, 30 ரூபாய்க்கும், ஆர்கிட் சிங்கிள், 180 ரூபாய்க்கும், டபுள், 350 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. கார்னேஷன் மலர் வகை, 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|